புதுச்சேரியில் இன்று முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 26 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, தொண்டை வலி, உடல் வலி மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்து இருப்பதாக கடந்த 11 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. அதே சமயம், இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 11 ஆம் தேதி திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவியதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் உயிரிழந்த இளைஞருக்கு இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியிலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இன்று முதல் வருகிற 26 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு வீடு – ‘இது ஒரு மைல்கல்’ என அண்ணாமலை பதில்..