புதுச்சேரியில் பெட்ரோல் நிலையத்தில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் வழங்கு குழாயை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா துவங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் ஒரே வரிசையில் நின்று பெட்ரோல் போடப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதனை மாற்றும் வகையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள கே.பி.எம் பெட்ரோல் பங்கில் மகளிருக்கு என்று தனியாக பிங்க் பெட்ரோல் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு, பெண்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பம்பை துவக்கி வைத்து பெட்ரோல் போட வந்த மகளிருக்கு ரோஜாப்பூ கொடுக்கவும், பெட்ரோல் போடவும் செய்தார். மேலும் துவக்க நாள் பரிசாக நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
பெட்ரோல் போட வந்த மகளிர்கள் கூறும் போது, வேலைக்கு செல்லும் போது பெட்ரோல் பங்குகளில் ஆண்களுடன் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும், தற்போது மகளிர்களுக்காகவே பெட்ரோல் பம்பு அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதேபோன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் தனியான மகளிர் பம்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பா?