புதுச்சேரி உழவர்கரை பேருந்து நிறுத்தம் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட கோரி 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மதுக்கடை முன்பு மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேரத்திற்கு பிறகு அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் ஆளும் அரசானது ஏராளமான மதுபானக்கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதே போல் புதுச்சேரி மாநிலம் உழவர்கரை பகுதியில் தேவாலயங்கள், கோவில்கள், பள்ளிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் மதுபான கடையை திறக்க அனுமதி கொடுத்து மதுபான கடையும் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை உடனடியாக மூட வேண்டும் எனக் கோரி உழவர்கரை மதுபான கடை எதிர்ப்பு போராட்டம் குழு ஒன்றை உருவாக்கி மது கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த சாலை மறியலில் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
உடனடியாக ரெட்டியார்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த கடையை அகற்றும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் காவல் துறை உயரதிகாரிகள், ஆணையர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலையாததால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் இரண்டு மணிநேரத்திற்கு பிறகும் மறியல் தொடர்ந்ததால் போலீசார் வலுக்கட்டாயமாக மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாண்டஸ் புயல் எச்சரிக்கை! சென்னை விமான நிலையத்தில் அவசர கால ஏற்பாடு ஆலோசனை கூட்டம்