உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், இரஷ்யா முழுவீச்சோடு கடுமையாக போர் புரியத் தொடங்கியது. இதனை எதிர்த்த உலக நாடுகள், இரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், நாளுக்கு நாள் இரஷ்யாவிற்கு நெருக்கடியான சூழ்நிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தனக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை ஒன்று சேர்க்கும் பணியில் இரஷ்யா இறங்கியுள்ளது. ஏற்கனவே, இரஷ்யா உடனான தனது உறவை இந்தியா தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்ததாக பாகிஸ்தானின் நட்புறவை பெற இரஷ்யா திட்டமிட்டுள்ளது.
நடப்பு மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில், இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது. அதனை அடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, இரஷ்யா அதிபர் கடிதம் எழுதினார். பாகிஸ்தானுடன் நல்ல ஒத்துழைப்பை பெறவும், நட்புறவை ஏற்படுத்தவும் இரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புதின், தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இக்கடிதத்திற்கு பதிலளித்த பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் சுமுகமாக இருந்த பாகிஸ்தான் உடனான இரஷ்யா உறவு, கடந்த காலங்களில் சரிவர இல்லை என்றே சொல்லலாம். தற்போது, அதனை நிலைப்படுத்தும் முயற்சியில் இரு நாடுகளும் முழு திறனோடு உள்ளது. இரஷ்யாவின் இந்த முயற்சி உலக நாடுகளுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இரஷ்யா – பாகிஸ்தான் இடையேயான உறவு, இந்தியாவிற்கு சிக்கலாகி விடுமோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க; மீண்டும் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் பிரதமர்- என்ன சொன்னார் தெரியுமா?