ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படியாக பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி சைதை சாதிக் மேடையில் பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அவர் பேசியதாவது, பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, இணையத்தில் சைதை சாதிக் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டது. சைதை சாதிக் பேச்சுக்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்து அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு அவர் டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரினார். கனிமொழியின் மன்னிப்பு பதிவுக்கு குஷ்பூ நன்றி தெரிவித்திருந்தார்.
இதன்பிறகு, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஓடிடி-க்கு வந்த பொன்னியின் செல்வன்… இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!
இந்நிலையில், திமுக நிர்வாகி சைதை சாதிக்கிற்கு எதிராக குஷ்பு தலைநகர் தில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்புகார் மனுவில், தான் உள்பட பாஜக நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும், கேவலப்படுத்தும் வகையிலும் சைதை சாதிக் பேசியுள்ளார். ஆதலால், அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புகார் மனு அளித்தப்பின்பு குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பில் குஷ்பு பேசியதாவது;
திமுகவில் இருக்கும் ஒருவர் என்னை மற்றும் மூன்று பெண்களை பற்றியும் அவ்வளவு அவதூறாகவும், கேவலமாகவும் பேசியிருக்கிறார். அப்போது அந்த மேடையில் இருந்த அமைச்சர் சிரிக்கிறார். அதன்பிறகு, அந்த நபரை கண்டித்ததாக கூறும் அமைச்சர், ‘நான் விளம்பரம்’ தேடிக் கொள்வதாக மீண்டும் என்மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, இதுபோன்ற ஆண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
என்று பேசினார்.
மேலும், ஒரு நல்ல சூழ்நிலையில் வளர்ந்த ஆண்கள் யாரும் இப்படியாக பெண்கள் குறித்து தவறாக பேசமாட்டார்கள் என்றும், அப்படி பேசும்போது அமர்ந்துகொண்டு ரசிக்க மாட்டார்கள் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை உயர்வு: வரவேற்பையும், கண்டனத்தையும் ஒரே மாதிரி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்!