இரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, உக்ரைன் நாட்டின் மீது போரைத் தொடங்கியது. மாதங்களை கடந்தும் நீடித்து வரும் இப்போர், 4 வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், போர் மட்டும் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இளைஞர்கள் இராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பை இரஷ்யா ரத்து செய்துள்ளது. இரஷ்யாவின், இந்த நடவடிக்கை உக்ரைன் மீதான போரை, தற்போதைக்கு நிறுத்தும் எண்ணத்தில் அதிபர் விளாடிமிர் புடின் இல்லை என்பது தெளிவாகிறது.
இரஷ்ய நாடாளுமன்றத்தில் இன்று, இராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பை இரத்து செய்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இராணுவத்தில் சேர விரும்பும் தொழில்முறை வீரர்களின் வயது வரம்புகளை நீக்கும் மசோதாவை, இரஷ்ய நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றியுள்ளனர். இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இரஷ்ய வீரர்களின் வயது 40 ஆக இருந்தது. இந்த வயது வரம்பை ரத்து செய்வதற்கான மசோதாதான் இது.
இரஷ்ய இராணுவத்தில் அதிகளவில் ஆட்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இராணுவத்தில் ஆட்சேர்ப்பை விரிவுபடுத்தும் ஒரு வழியாகத் தான் இந்த முடிவு பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் பல இரஷ்யர்கள் வேலைவாய்ப்பையும் பெறுவார்கள். இதற்கு முன் இருந்த பழைய ஆட்சேர்ப்பு நடைமுறையின்படி, இராணுவத்தில் ஆட்கள் சேர்க்கப்பட்டால், துல்லியமான பல ஆயுதங்களை இயக்குவதற்கும், பொறியியல் பணிகள் மற்றும் மருத்துவத் துறைப் பணிகளில் பணியாற்றுவதற்கும் ஏற்றதாக அமைந்திருந்தது. ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவானது தேவைக்கு ஏற்ப, சிறப்புத் தகுதி மற்றும் அதிக திறமை உள்ளவர்களை கண்டறிந்து பணியமர்த்துவதை எளிதாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில், இரஷ்யா நிகழ்த்தி வரும் போரில், விருப்பமும், தன்னார்வமும் உடைய ஒப்பந்த வீரர்கள் மட்டுமே சண்டையிடுவதற்கு அனுப்பப்படுகிறார்கள் என்றும், இரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவின் படி, மேலும் பல இளம் வீரர்கள் நிறைய பேரை இராணுவத்தில் இணைத்து கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இரஷ்ய இராணுவம் தன்னார்வலர்களையே அதிகளவில் நம்பியிருககிறது. அங்கு 18 வயது முதல் 27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு ஆண்டு கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலரும் பல காரணங்கள் சொல்வதால், அவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து வயது வரம்பை விலக்களிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒற்றைக் காலினை சிறுமிக்கு பரிசளித்த சோனு சூட்..!!