நேபாள நாட்டின், பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கி நேற்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 இந்தியர்கள் உட்பட மொத்தம் 22 பேருடன் பயணித்த தாரா ஏர் நிறுவனத்தின், 9N-AET என்ற சிறிய ரக விமானம், வானில் பறக்கத்தொடங்கிய 15 நிமிடங்களில், கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் தொடர்பை இழந்துவிட்டதாக விமான செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இந்த விமானத்தில் பயணித்த 4 இந்தியர்களும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், விமானத்தில் இவர்களுடன் ஜெர்மனியைச் சேர்ந்த 2 பயணிகளும், 13 நேபாள பயணிகளும் உடனிருந்தனர் என விமான நிறுவனம் தெரிவித்தது.
விமானம் பயணித்த பகுதியின் உள்ளூர் காவல்துறை தகவலின் படி, டிட்டி மலைப் பகுதியில் இந்த விமானம் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அப்பகுதி மக்கள் அங்கு விசித்திரமான சத்தம் கேட்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமானத்தை தேடும் பணியை நேபாள அரசு உடனடியாக தீவிரப்படுத்தியது. ஹெலிகாப்டர் மூலம் விமானத்தை தேடி வந்த ராணுவத்தினர், கோவாங் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதைக் கண்டறிந்தனர்.
சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவிற்கு விமானத்தில் பாகங்கள் சிதறியதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விமானத்தில் பயணித்தவர்களில் 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் உயிரிழந்ததாக தாங்கள் சந்தேகிப்பதாகவும், இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதுவதாகவும் நேபாள உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்குள்ள பகுதிகள் பெரும்பாலும் மலைத் தொடர்களால் சூழப்பட்டுள்ளதால், விமான விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளன. மேலும் மலைப் பகுதியில் வானிலை மாற்றம் திடீரென நிகழ்வது இயல்பு என்பதால் இங்கு பயணம் செய்யும் விமான ஓட்டிகளுக்கு சவால் அதிகம் காணப்படுகிறது.
மனிதர்களால் இந்த உலகினை விட்டுச் சென்ற ஒரு பறவை இனத்தின் கதை..