புதுச்சேரியில் திருநங்கைகளிடம் சில்மிஷம் செய்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்த ரவுடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி உருளையன்பேட்டை அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் குட்டி சிவா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. சமீபத்தில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த குட்டிசிவாவை ஊருக்குள் நுழைய தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை பூமியான்பேட்டை லாம்போர்ட் சரவணன்நகர் அருகே சென்ற ரவுடி குட்டிசிவா அங்கிருந்த திருநங்கைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த திருநங்கை ஒருவர் செல்போன் மூலமாக தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு கத்தியுடன் வந்த 2 பேர் குட்டிசிவா மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தலை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் அடைந்த குட்டி சிவாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பாட்ஷா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சந்தேகத்தின்பேரில் திருநங்கைகள் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை., பாஜகவை அனுமதிக்க முடியாது., சீமான் காரசார பேச்சு