ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடப்போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து வருகின்றனர்.
இதனிடையே, 6 பேரின் விடுதலை தொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை எதிர்த்து வாதிடப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வ.ஊ.சி சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி அவரது படத்திற்கு சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியார்களைச் சந்தித்த சீமான், 6 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவை எதிர்த்து வாதிடுவோம். மத்திய அரசின் மனு அவசியம் அற்றது ஆகும். எளிதாக இந்த விடுதலை தீர்ப்பு கிடைக்கவில்லை; இது நீண்ட நாள் போராட்டம். இதை சட்டப்பூர்வமாக அணுகாமல் மானுடப்பற்று, கருணையின் அடிப்படையில் அணுக வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், இந்த விவகாரத்தில் எனக்கு இருக்கும் வலியும் காயமும் அண்ணாமலைக்கு இருக்க வாய்ப்பில்லை என்றும், அது அவர்களின் கட்சி கோட்பாடு என்றும், விடுதலை செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்றும், அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்ததோடு, திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நடப்பது பங்காளி சண்டை; இதற்காக பாஜகவை எப்படி உள்ளே விட முடியும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அரசு, தொழிலதிபர்கள், தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோர்த்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி உயரும்: முதல்வர் ஸ்டாலின்