பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், நேற்று தனது 74- வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பொதுமக்கள், உலக தலைவர்கள் என பலரும் சார்லஸுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சார்லஸின் பிறந்தநாளான நேற்று, அவர் ஒரு புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அதாவது, மன்னர் சார்லஸின் தந்தை இதுவரை வகித்து வந்த வின்ட்ஸர் பூங்காவின் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறைந்த எடின்பர்க் கோமகன் இளவரசர் ஃபிலிப் பதவி வகித்து வந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வனத்துறை அதிகாரி பொறுப்பை, மன்னர் சார்லஸ் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வின்ட்ஸர் பூங்காவில் இருக்கும் ஒரு மிகப் பழமையான மரத்தின் அருகே மன்னர் சார்லஸ் நின்றிருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
சுமார் 70 ஆண்டுகள், பூங்காவின் வனப் பாதுகாப்பு அதிகாரியாக எடின்பர்க் கோமகன் இளவரசர் ஃபிலிப் இந்தப் பதவியை வகித்து வந்தார் என்று கூறப்படுகிறது. மேலும், பிரிட்டனின் மிகப் பழமையான தோட்டத்தை பராமரிக்கும் பணிகள் குறித்து துணை அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘லவ் டுடே வின் வெற்றி பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது’ – பிரபல இயக்குநர் புகழாரம்!