சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவதாம் முற்றி கைக்கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று வழக்கம் போல் கட்சி தலைவர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜெயக்குமார் என்பவரை நீக்க வேண்டும் என நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், அவர்கள் கட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்த்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என மூன்று மணி நேரமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
இதனிடையே, திடீரென இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறி, பின்னர் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும், நெல்லையில் இருந்து வந்தவர்களை அவர்கள் வந்த வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் கட்சி அலுவலகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: மதரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க வேணுகோபால் கமிஷனை அரசு ஏற்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்