2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா மிஞ்சும் என்று ஐநா-வால் கணிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மக்கள்தொகையில் தற்போது சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் மக்கள்தொகை குறித்த கணிப்பில் ஈடுபட்டது. அதன்படி, உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டு 850 கோடியாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
2050-ம் ஆண்டு உலக மக்கள் தொகையானது 970 கோடியிலும், 2080-ம் ஆண்டு உலக மக்கள் தொகையானது 1000 கோடிகளை தாண்டியும் இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும், ஐநாவின் அறிக்கையில், 2023-ம் ஆண்டு உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா மிஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையை பொறுத்தவரையில், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் சீனாவும் இந்தியாவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிவருகிறது. சீனாவில் மக்கள் தொகை 140 கோடியே 26 லட்சமாகவும், இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடியே 12 லட்சமாகவும் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஐநாவின் கணிப்பின்படி, 2050 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 160 கோடியே 68 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சீன மக்கள்தொகை 130 கோடியே 17 லட்சமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதோடு, 2022-ம் ஆண்டின்படி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு பகுதிகளாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா எனக் கூறப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 200 கோடியே 300 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றும், இது உலக மக்கள் தொகையில் 29 சதிவீதம் என்றும் ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில், 200 கோடியே 100 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றும், இது உலக மக்கள் தொகையில் 26 சதவீதம் என்றும் ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உலக மக்கள்தொகை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கருத்து தெரிவித்தார்.
ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஆண்டு பூமியில் மக்கள்தொகை எட்டு பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்த்திருக்கும் இச்சமயத்தில், இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதாபிமானத்தை அங்கீகரிப்பதுக்கும் இந்த நாள் ஒரு நல்ல நாளாகும்.
மேலும், மனிதனின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கவும், தாய் மற்றும் சேய் இறப்பு விகிதங்களை குறைக்கவும் உதவிய சுகாதார முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.
அதேசமயம், இந்த கணிப்புகள், நாம் நமது உலகை கவனித்துக்கொள்வதற்கான நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது.
இவ்வாறு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
அமேசான் மழைக்காடுகள் அழிப்பு! காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்குமா?