மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இச்சூழலில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
சூழல்கள் இப்படியாக இருக்க, மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், மாலத்தீவில் அவருக்கு அடைக்கலம் தரக்கூடாது என்றும் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாலத்தீவு மக்களும், மாலத்தீவில் வசிக்கும் இலங்கை மக்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அவர் மாலத்தீவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே அவசரநிலையை அமல்படுத்தியுள்ளார்.
கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கோரி மாலத்தீவில் போராட்டம்