Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்மைக்ரோபிளாஸ்டிக்; உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் அபாயம்??

    மைக்ரோபிளாஸ்டிக்; உலகம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் அபாயம்??

    சில மாதங்களுக்கு முன்னர் மனித உடலில் முதன் முதலாக மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்ட செய்தி உலகத்தினை அதிரச்செய்தது. நுரையீரல் திசுக்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக 13 மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகளில், 39 மைக்ரோ பிளாஸ்டிக்குகள் 11 மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    நுரையீரலின் மிக ஆழமான பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முழுமையாகக் கண்டறியப்படவில்லை.

    மைக்ரோ பிளாஸ்டிக்..

    உலகம் முழுவதும் பல மில்லியன் டன் அளவுள்ள பிளாஸ்டிக்குகள் ஒவ்வொரு வருடமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளில் பெரும்பாலும் குப்பைகளாக தூக்கியெறியப்படுகின்றதே தவிர மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்குகளின் அளவு மிகக் குறைவு.

    இவ்வாறு பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் குப்பைகளாகத் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்குகள் மக்குவதற்கு பல காலம் எடுத்துக் கொள்கின்றன. 

    100 முதல் 1000 வருடங்கள் வரை மக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் பிளாஸ்டிக்குகள் மற்ற பொருட்களை போல மண்ணோடு மண்ணாவதில்லை. இவைகள் சின்ன சின்ன துண்டுகளாக உடைந்து நீரிலும், காற்றிலும், உயிரினங்களின் உடலுக்குள்ளும் சென்று விடுகின்றன. 

    Micro Plastic found in fish

    இத்தைகைய சிறு சிறு துண்டுகளாக்கப்பட்ட பெரும்பாலான பிளாஸ்டிக்குகளின் இறுதி நிலையே மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படுகிறது. ஒரு சில நிறுவனங்களில் தங்களது தேவைக்காகவும் மைக்ரோ பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த மைக்ரோ பிளாஸ்டிக் பொதுவாக வெறும் கண்களினால் பார்க்க முடியாத அளவிற்கு சிறியவை. இவற்றின் அளவு ஒன்று முதல் ஐந்து மில்லிமீட்டர் அளவு இருக்கும். 

    அளவில் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்குகள் நீரின் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் எளிதில் அடித்துச் செல்லப்படுபவையாக உள்ளன. 

    மனிதர்களின் காலடித்தடம் அதிகம் படாத ஆர்டிக் பிரதேசங்களிலும், கடலின் ஆழத்திலும், மலைச்சிகரங்களின் உச்சியிலும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காணப்படுகின்றன என்பது தான் கவலைக்குரிய விடயம்.

    மனிதர்கள் உடலில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் நுழைந்தது எப்படி..?

    அளவில் மிகச்சிறிய இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உணவுச் சங்கிலியில் மிக எளிதாக நுழைந்து விடுகின்றன. கடல் வாழ் உயிரினங்களைப் பொறுத்த வரை இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மிகுந்த ஆபத்தினை ஏற்கனவே ஏற்படுத்தத் துவங்கி விட்டன.

    அளவில் சிறிய, கடலிலுள்ள கழிவுகளை உணவாக உட்கொள்ளும் சிறிய அளவு மீன்கள் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகளை உணவாக நினைத்து உண்ணுகின்றன. இந்த சிறிய மீன்களை உணவாக உட்கொள்ளும் பெரிய மீன்களின் வயிற்றுக்குள் செல்லும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் பின்னாளில் விஷமாக மாறி அவற்றினைக் கொல்கின்றது.

    micro plastics in food chain

    இந்த மீன்களை உண்ணும் மனிதர்களும் மைக்ரோ பிளாஸ்டிக்கினால்  பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 14 மில்லியன் டன் அளவுள்ள மைக்ரோ பிளாஸ்டிக் கடலில் கழிவாக சுற்றி வருகிறது என்பது உண்மையில் கவலைத்தரும் விடயம் ஆகும்.

    மிகவும் லேசாக இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் காற்றினால் எளிதில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இன்று உலகில் மனிதர்கள் காலடித்தடம் படாத இடங்களில் கூட மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் நாம் தினம் உபயோகிக்கும் பெரும்பாலான பொருள்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் உள்ளது. உப்பு, சர்க்கரை, தேன், மதுபானம் போன்ற பொருட்களில் இது வரை மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் உபயோகிக்கும் தண்ணீர் பாட்டில்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கினை உற்பத்தி செய்கின்றன என்பது மற்றொரு அதிர்ச்சியான தகவல்.

    சமீபத்தில் குழந்தைகளின் பால் டப்பாக்கள் வெப்பப்படுத்தப்படும் போது 16,200 மைக்ரோ பிளாஸ்டிக்குகளை வெளியிடுகின்றன என்பது தெரியவந்துள்ளது.

    இவ்வாறு மனிதர்களின் உடலுக்குள் செல்லும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அனைத்தும் வெளியில் வருவது இல்லை. இவை அளவில் மிகச்சிறியனவையாக இருப்பதால் உடல் திசுக்களினுள் எளிதில் நுழைந்து சென்றுவிடுகின்றன.

    பாதிப்புகள்..

    இவை மிக எளிதாக நமது உள்றுப்புகளுக்குள் சென்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கிலுள்ள பிளாஸ்டிசைசர் எனப்படும் பொருளானது மனிதர்களின் உடலில் ஹார்மோன்கள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

    மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் பல்வேறு விஷ தனிமங்களை (லெட், வேதியுரங்கள், காட்மியம்) கவர்கின்றது. அதாவது அந்த தனிமங்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கின் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்கின்றன.

    மேலும், இவ்வகையான மைக்ரோ பிளாஸ்டிக்கினை உட்கொண்ட உயிரினங்களின் மீது இருக்கும் கிருமிகள் பல்வேறு வகையான வியாதிகளைக் கடத்துகின்றன.

    உண்மையினைக் கூறவேண்டுமெனில், இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கானது மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தற்போது வரை கண்டறியப்படாமலே உள்ளது.

    என்ன செய்ய வேண்டும்??

    பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களின் இறுதி வடிவமாக மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது. 

    எனவே மைக்ரோ பிளாஸ்டிக்கினை குறைக்க வேண்டுமெனில், ஒரு முறையான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை அமைக்கப்பட வேண்டும், அவற்றினை குப்பையாக கொட்டுவதையும், நேரடியாக எரிப்பதனையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பெருமளவு பிளாஸ்டிக் குப்பைகள் உருவாவதை குறைக்க முடியும்.

    பிளாஸ்டிக்கினை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அவர்கள் உற்பத்தி செய்த பிளாஸ்டிக் பொருட்கள் முழுவதினையும் மறுசுழற்சி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த பிளாஸ்டிக் உற்பத்தியில் ஒன்பது சதவீத பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

    மைக்ரோ பிளாஸ்டிக் கடலில் சேருவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    மைக்ரோ பிளாஸ்டிக்கிணை உட்கொள்வதிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி?

    புட்டிகளில் அடைக்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: கிட்டத்தட்ட அனைத்து தண்ணீர் நிறுவனங்களின் பாட்டில்களிளும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டுள்ளது.

    குழாய்களிலிருந்து பெறப்படும் தண்ணீரை விட 22 மடங்கு அதிக மைக்ரோ பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப் பட்ட தண்ணீரில் உள்ளது. (வெப்பப்படுத்துவதன் மூலம் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் உருவாகிறது குறிப்பிடத்தக்கது) அதாவது குழாய் தண்ணீரில் 4,000மாக இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அடைக்கப்பட்ட பாட்டில்களில் 1,30,000ஆக உள்ளது.

    மைக்ரோ பெட்ஸ் உள்ள பொருட்களை தவிர்த்தல்.. மைக்ரோ பெட்ஸ் எனப்படும் பொருட்கள் சில அழகு சாதனங்களிலும், பற்பசைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மைக்ரோ பெட்ஸ் ஒரு வகையான மைக்ரோ பிளாஸ்டிக் ஆகும். உலகின் பல பகுதிகளில் இந்த பொருட்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் சில நாடுகளில் இவை சட்டப்பூர்வமாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

    பாலிஸ்டர் போன்ற பொருட்களினால் ஆனா ஆடைகளைத் தவிர்த்தல்.. இந்த வகையான ஆடைகள் பிளாஸ்டிக் ஃபைபரினால் செய்யப்பட்டவை. இந்த உடைகளை நாள்பட்ட கணக்கில் உபயோகிக்கும் போதும், துவைக்கும் போதும் இந்த ஃபைபரினை வெளியிடுகின்றன.

    பளபளப்பூட்டும் பொருட்களை தவித்தல்.. ஜிகினா போன்ற பளபளப்பூட்டும் பொருட்கள் பிவிசி, பெட்(PET) போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன. இந்த வகையான பொருட்கள் எப்பொழுதும் காற்றில் மிதந்து கொண்டிருப்பவையாக உள்ளன.

    பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல்.. ஆம், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பதால் மட்டுமே இந்த விளைவிலிருந்து இனி வரும் காலத்தினை காப்பாற்ற முடியும். பிளாஸ்டிக்கானது நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்டது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவு பிளாஸ்டிக்குகள் நமது வருங்காலத்தினைக் கேள்விக்குறியாக்கி வருகிறது என்பதும் உண்மை.

    பிளாஸ்டிக்குகள் தற்போது சர்வதேச பிரச்சனைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. தங்களது நாட்டில் உருவாக்கிய குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் வளர்ந்த நாடுகளே விழி பிதுங்கி நிற்கும் நிலையில், வளர்ந்த, பின்தங்கிய நாடுகள் பற்றிய நிலைமையினை அடியேன் எடுத்துக் கூறி தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

    இந்தியா போன்ற நாடுகளில் என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளலாம் என்கிற நிலைமை நிலவுகிறது. இங்கு பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு என்றே கூற வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பிளாஸ்டிக்கினால் உண்டாகும் விளைவுகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூற ஆசிரியர்கள் தவருவதன் மூலம் ஒரு குற்றவுணர்ச்சி இல்லாத தலைமுறையினரை உருவாக்கும் நபர்களாய் மாறுகின்றனர்.

    இன்று நம்மால் நமது தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கானது நம்மை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகினையும் தனது பிடியில் வைத்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா இடத்தினையும்.. பிளாஸ்டிக் இல்லா உயிரினத்தினையும் காண்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் நாம் எந்த விதமான பாதுகாப்பு முறைகளையும் எடுக்காவிடில் வருங்காலம் என்பது இருக்கும்.. ஆனால் அந்த வருங்காலத்தில் இந்த உலகமும், உயிரினங்களும், நமது அடுத்த சந்ததியினரும் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். பிளாஸ்டிக் இல்லா தலைமுறையினை உருவாக்குவோம். நம் உலகினையும், பிற உயிரினங்களையும் பாதுகாப்போம்.

    வாட்டி வதைக்கும் வெயில்; பொழியுமா மழை? என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....