1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது. அதன்படியே மகளிர் தினம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி பின்பற்றப்பட்டு வருகிறது.
உன் சுந்திரத்தைப் பறிக்க
நான் முதலில் செய்வது
உன்னை உச்சம்
என்று நம்பவைப்பதே!
காலங்காலமாக பெண்களை உச்சத்தில் வைக்கிறேன் என்று அவர்களின் சுதந்திரத்தைப் பறித்துக்கொண்டு இருக்கிறது, நம் சமூகம்! சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் தங்கம் என்று கூறி பெண்களை மதிப்பின் உச்சத்தில் வைத்து வைப்பார்கள் அதன்பிறகு அம்மதிப்பு குறையக்கூடாது என்பதற்காக அவர்களை அடக்க, ஒடுக்க முயற்சிகள் மேலெழும்.
மேலும், பெண்களின் நலனுக்காக மதிப்பிற்காக செய்கிறேன் என்று ஒரு பாதையை இவ்வுலகம் பெண்களுக்கு வகுக்க, அப்பாதையானது பெண்களுக்கு அடிமைத்தனத்தையும் பாதை வகுத்தவர்களுக்கு மேன்மைத்தனத்தையும் அளிப்பதாகவே அமைந்துவிடுகிறது. சக உயிர் என்று நினைத்தாலே, இணையான உயிர் என்று நினைத்தாலே வாழ்வு சிறக்கும் என்பது ஆதிக்கருத்து.
ஆசைகள் எல்லாம் எனக்கென கொண்டு
மீசைகள் இல்லா கனவுகள் கண்டு
பொறுப்புகள் தேடி பயணங்கள் இன்று
செருப்புகளே என் சிறகுகள் என்று போகிறேன்
-விவேக்
மேற்கூறிய கவிதையின் சாயலில்தான் தற்போது பல பெண்களும்! அவர்களுக்கு தெரியும் எது வேண்டுமென்று..அவர்களுக்கு தெரியும் எது சரி எது தவறென்று! சக உயிராய் அனுபவத்தையும் ஆறுதலையும் இப்படியும் இருக்கலாம் என்பதையும் தோழமையில் கூறலாமே தவிர கட்டளையிட அதிகாரம் என்பது இல்லை.
‘யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க நீயோ அடிமை இல்லை’ என்ற பாடல் வரியைப்போன்றுதான் பல பெண்களின் எழுச்சியும் நிகழ்கிறது. அப்படியான புரிதல்தான் தற்போது அவசியமும் கூட! அழகான பறவையாக பெண்களை உருவகம் செய்து கூண்டிற்குள் அடைப்பதுதான் சமூகத்தின் தந்திரம். எனவே கூண்டை உடைத்து வெளியே வருதல் அவசியம். “கூண்டை கொத்திப் பாா் அது திறக்கும் .., சிறகை நீட்டிப்பாா் சீட்டெடுக்காதே எவனுக்கும்” எங்கெல்லாம் அடக்குமுறை நிகழ்கிறதோ அங்கெல்லாம் ‘திருப்பி அடித்தல்’ அவசியமாகிறது.
பிரத்யேக நாட்கள்
கடந்துப் போவதற்கு அல்ல.
நினைவு கூர்வதற்கே !
மகளிர் தினம் என்பது வெறுமனே ஒரு சிறப்பான நாள் என்று கடந்துப் போகக்கூடிய நாள் இல்லை. இந்நாள், ஒவ்வொரு வருடமும் சென்ற வருடத்தில் இருந்த பெண்களின் நிலையில் தற்போது முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்றும் அடைந்திருந்தால் அடுத்த கட்டம் என்னவென்றும், அடையவில்லை என்றால் ஏன் அடையவில்லை என்பதை யோசித்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க அனைவரையும் குறிப்பாக அரசை யோசிக்க செய்யக்கூடிய நாள். இன்றைய நாளில் மகளிரை போற்றுதல் எவ்வளவு நிகழ்கிறதோ அதே அளவு அவர்களை சக உயிராக மதித்தலும் நிகழ்தல் வேண்டும்!
மொழி இனம் மதம் என எவற்றின் பெயரினால் அடக்குமுறை நிகழ்ந்தாலும் அது இவ்வுலகுக்கு தேவையற்றதுதான்.
எப்படி நோக்கினாலும் அனைவரும் சக உயிரிகள் தான்! அனைவருக்கும் வாழ்வு உண்டு! அனைவரும் வாழ்வோம்!
தினவாசல் சார்பாக வாழ்வு எளிமையாக, வாழ்வு சிறப்பாக அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!