புதுச்சேரியில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி மற்றும் 11-ம், 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களக்கு இலவச மடிக்கணினிகள் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் ‘குழந்தைகள் நாள்’ விழா கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள, காமராஜர் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில், முதலமைச்சர் ரங்கசாமி முதன்மை விருந்தினராகப் பங்கேற்று சிறந்தப் படைப்பாளிக் குழந்தைகளுக்கான விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் குழந்தைகள் நாள் விழா போட்டிகளில் மண்டல அளவில் வென்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். இதில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சிறந்த கல்வியை கொடுக்க வேண்டியது அரசின் கடமை நமது அரசு அதனை சிறப்பாக செய்து கொண்டு வருகிறது என்றும், நல்ல சிந்தனையை கொடுக்க கூடியது கல்வி என்றும், கடின உழைப்பு இருந்தால் வெள்ளி காண முடியும் என்றும், சில சமயங்களில் நினைத்தது கிடைக்காமல் போகலாம் அதனால் சோர்ந்துவிட கூடாது என்றும், எது கிடைக்கிறதோ அதில் வெற்றி காண வேண்டும் என பேசினார்.
மேலும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் செல்போன்கள் போன்ற தொழில்நுட்பங்கள் தெரிந்திருந்தாலும், இருந்தாலும் நல்ல நூல்களை படிக்க வேண்டும் என்றும், படிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல்வதை கேட்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச மதிவண்டி மற்றும் 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் ஓரிரு மாதங்களில் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
இதையும் படிங்க: தலைமைத்திறன் பயிற்சி முகாம்: புதுச்சேரி கூட்டுறவுத்துறை ஏற்பாடு