இந்தியா தற்போது 28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட நாடாக உள்ளது. அதென்ன யூனியன் பிரதேசங்கள்? யூனியன் பிரதேசங்கள் உருவாக காரணிகள் என்ன? மாநில அரசில் இருந்து யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு வேறுபடுகிறது? வாருங்கள் இக்கட்டுரையில் காண்போம்.
யூனியன் பிரதேசங்கள்:
தில்லி, புதுச்சேரி, சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் & டையூ, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத் தீவுகள், ஜம்மு காஷ்மீர், மற்றும் லடாக்.
உருவாக்கம்:
மாநிலங்களோ, மாவட்டங்களோ, ஊர்களோ பிரிக்கப்படுவதன் அடிப்படைக் காரணமாக கூறப்படுவது நிர்வாக வசதி. 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியா முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் நான்கு பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டது. இதைப் பிரிப்பது இந்திய ஒன்றிய அரசு அதாவது மத்திய அரசு.
இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு நான்கு பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கு கீழும் ஒவ்வொரு காரணத்தோடு ஊர்கள் இணைக்கப்பட்டன.
- முதல் பிரிவில், இந்தியாவில் பிரிட்டிஷ் கவர்னர் ஆட்சியில் இருப்பவையும் மற்றும் தனியாக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த மாகாணங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டன.
- இரண்டாம் பிரிவில், அரசர்கள், குறுநில மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களான ஹைதராபாத், பாட்டியாலா, கிழக்கு பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான் முதலான மாகாணங்கள் உள்ளடக்கப்பட்டன.
- மூன்றாம் பிரிவில், முன்னாள் தலைமை ஆணையர்களும், குறுநில அரசர்களும் ஆளுகைசெய்த டெல்லி, அஜ்மீர், போபால், கூர்க், இமாசலப் பிரதேசம் முதலானவை சேர்க்கப்பட்டது.
- நான்காம் பிரிவில், அந்தமான் நிகோபார் தீவுகள் மட்டும் ஒதுக்கப்பட்டது.
இந்த நான்கு பிரிவுகளைக் கொண்டு இந்தியா இயங்க, 1956-ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்பு மசோதா அமல்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின்படி, மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த நான்கு பிரிவுகளும் ஒழிக்கப்பட்டன. இந்த மாநில பிரிவின்போது, சில பகுதிகள் மாநில பிரிவு அந்தஸ்தை தாண்டி, யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்படுகின்றன. இந்த பிரதேசங்கள் நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.
ஏன் சில பகுதிகள் மட்டும்தான் ஒன்றிய (union) பிரதேசங்களாக அறிவிக்கப்படுகின்றன? பொருளாதாரம், நிர்வாகம், அரசியல், கலாசாரம் போன்ற காரணிகளின் அடிப்படையில் சில பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மேற்கூறிய காரணிகளில் நிலையற்றத் தன்மையை அந்த சில பகுதிகள் கொண்டுள்ளதால், அவைகள் யூனியன் பிரதேசங்களுக்கு உள்ளாக வைக்கப்படுவதாக மாநிலங்கள் மறுசீரமைப்பு மசோதா தெரிவித்தது. அதன்படியே, இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் உருவாகின.
யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு மாநில அரசுளில் இருந்து வேறுபடுகிறது?
மாநிலங்களைப் பொறுத்தவரையில், அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்களால் நேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் மாநிலங்களை ஆட்சி செய்யும். அதிகாரங்களை நிர்வகிக்கும்.
யூனியன் பிரேதசங்களைப் பொறுத்தவரையில், நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்யப்படும். அதிகாரங்கள் நிர்வகிக்கப்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ஒன்றிய அரசு தன் சார்பாக யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநரை நியமித்து ஆட்சியை நடத்துகிறது.
மாநிலங்களிலிருந்து யூனியன் பிரதேசங்கள் வேறுபட்டாலும், சில யூனியன் பிரதேசங்கள் மட்டும் மாநில அந்தஸ்தையும் ஒருங்கே பெற்றுள்ளன. அதாவது, புதுச்சேரி, தில்லி மற்றும் ஜம்மு காஷ்மீர் பிரதேசங்களில் மாநில அரசுகளும் செயல்பாட்டில் இருக்கும், ஆளுநர் ஆட்சியும் செயல்பாட்டில் இருக்கும்.