ட்விட்டரில் பணிபுரியும் 7400 ஊழியர்களில் 3700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தகவல்கள் வெளியாகியது.
கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த ட்விட்டர் ஓப்பந்த பிரச்சினை ஓய்ந்து, எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரை தன் வசப்படுத்தியுள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் பயோவில் சீஃப் ட்விட் (Chief Twit) என்று மாற்றம் செய்துள்ளார். எங்கே என்ற இடத்தில் ட்விட்டர் தலைமை அலுவலகம் (Twitter HQ) எனப் பதிவிட்டு தலைமையகத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவல் ட்விட்டர் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம், ட்விட்டரில் பணிபுரியும் 7400 ஊழியர்களில் 3700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ட்விட்டர் நிறுவனத்தில் வீட்டிலிருந்தபடியே வேலைப்பார்க்கும் முறையையும் எலான் மஸ்க் நீக்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ட்விட்டர் ப்ளு டிக்கிற்கு 8 அமெரிக்க டாலர்கள் (ரூ.660) வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காற்று மாசுபாடு எதிரொலி: சுவாசப்பிரச்சனை, கட்டுமானப்பணிகள் நிறுத்தம், பேராபத்தில் தில்லி..!