மழைக்காலமான தற்போது அதிமுகவின் திட்டங்கள் தான் பலன் அளிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனிடையே, திருவிக நகர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிக்கன் பிரியாணி உணவை வழங்கினார்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு உணவு கூட வழங்கவில்லை என்றும், இரண்டு நாட்கள் பெய்த மழையையே திமுக அரசினால் சரியாக கையாள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், மழை நீர் வடிகால் அமைக்கும் பணி அதிமுக ஆட்சிகள் காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் திமுகவின் இயலாமையால் தற்போது மழை நீர் அதிக இடங்களில் தேங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி அதிமுகவினர் பொதுமக்களுக்கு நிவாரண உதவியை வழங்கி வருவதாகவும், சென்ற 10 ஆண்டுகளில் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கை தான் தற்போது திமுக அரசை காப்பாற்றி வருவதகவும் தெரிவித்தார்.
மேலும் கொளத்தூர் என்ன கன்னித்தீவா? முதலில் கொளத்தூரை தொகுதி என்றே சொல்லக் கூடாது குளமூர் என்று தான் சொல்ல வேண்டுமென குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்