சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வானில் செவ்வாய்க்கிழமை தோன்றிய சந்திர கிரகணத்தை மக்களால் காண முடியவில்லை.
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. பூமியின் உள்நிழல் நிலவின் மீது விழுவதால் நிலவு மறைப்படும். சந்திர கிரகணத்தின் போது நிலவை அடையும் சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தின் வழியாக பயணம் செய்வதால் நிலவானது சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். அந்தச் சமயம், சூரிய உதயம் மற்றும் மறையும் பொழுது அதன் ஒளி நிலவின் மீது எதிரொளிக்கும். அதனால், நிலவு ரத்த நிறத்தில் கண்களுக்கு (Blood moon) தெரிகிறது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 வரை கிரகணம் தெரிந்தது. அதில் முழு சந்திர கிரகணம் 3.46 முதல் 6.11 வரை தெரிந்தது.
இந்தச் சந்திரக் கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பார்த்தனர்.
இந்தியாவில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சந்திர கிரகணத்தின் இறுதி நிலைகளைக் காண முடிந்தது.
சென்னையில் மழை காரணமாக பல பகுதிகளில் மேகம் மூடிய நிலையில் இருந்ததால் மக்கள் சந்திர கிரகணத்தை சரியாக பார்க்க முடியவில்லை.
அதே சமயம், தமிழகத்தில் மழை மற்றும் மேகம் மூட்டம் இல்லாத பகுதிகளில் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் என தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் எஸ்.சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்தார்.
அடுத்த முழு சந்திர கிரகணம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி நடைபெறும். பகுதி சந்திர கிரகணம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி நிகழும்.
இதையும் படிங்க: இந்தியாவில் தெரிந்த சந்திர கிரகணத்தின் இறுதி நிலை