மதுரையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரண நிதி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இதுவரை பாதாள சாக்கடை அமைக்கப்படாத இடங்களில், மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, மதுரை கூடல் புதூர் அருகே உள்ள அசோக் நகர் பகுதியில் மதுரை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைக்கான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில், கடந்த 07-ஆம் தேதி மூன்று ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கொத்துகாடு பகுதியை சேர்ந்த 36 வயதான சக்திவேல் என்பவர் உள்பட மூன்று பேர் ஈடுப்ட்டிருந்தனர். அப்போது, மேலே உள்ள மண் சரிந்து பணியில் ஈடுபட்டவர்கள் மேலே விழுந்தது.
இச்சமயத்தில், மண் சரிவிலிருந்து இருவர் தப்பிய நிலையில் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற ஒப்பந்த தொழிலாளர் மண் சரிவில் சிக்கி பலியானார். இதைத்தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
7-ம் தேதி காலை 11.30 மணி முதல் நடைபெற தொடங்கிய மீட்பு பணியானது, அன்று மதியம் 3.30 வரை நீடித்தது. பின்பு, இறந்த நிலையில் சக்திவேல் மீட்கப்பட்டார்.உயிரிழந்த சக்திவேலுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சக்திவேலின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
நேற்று மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது.
இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பள்ளத்தில் சிக்கி, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மூன்று மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சக்திவேல் பணியாற்றிய ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதாள சாக்கடை பணியின் போது பரிதாபமாக போன உயிர் ! மதுரையை பதற வைத்த சம்பவம்