தாவரங்கள் இந்த உலகின் உற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தாவரங்கள் உணவாகப் பயன்படுகிறது.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்.. தாவரங்களின்றி இந்த உலகில் உயிரினங்களின் வளர்ச்சி இல்லை. உயிரினங்கள் உயிர் வாழ தாவரங்கள் அவசியமாக உள்ளது.
எனவே தாவரங்கள் வளரும் போதே அவற்றின் அனைத்து உறுப்புகளும் உணவிற்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் வெட்டப்படுகின்றன அல்லது பறிக்கப்படுகின்றன.
ஒரு உயிரினத்தினை அடித்தாலோ அல்லது அந்த உயிரினம் துன்புறுத்தப்பட்டாலோ, காயப்பட்டாலோ அதனால் உண்டாகும் வலியினை ஏதோ ஒரு முறையில் வெளிப்படுத்துகின்றன.
மற்ற உயிரினங்கள் சரி.. தாவரங்கள்?? தாவரங்களுக்கு ஓரறிவாயிற்றே?! அவைகள் வெட்டப்படும் போதும், உண்ணப்படும்போதும், தனது இலைகள் பறிக்கப்படும் போதும் உண்டாகும் வலியினை உணருமா? மொத்தத்தில் தாவரங்களுக்கு வலிக்குமா.. என்பது பற்றி நமது விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்று பாப்போம்.
நிஜமாகவே வலிக்குமா என்ன??
தாவரங்களுக்கு வலியினை உணரும் தன்மை இல்லை. அவற்றுக்கு வலி உணரும் நரம்புகளோ, மூளையோ இல்லை என்றே நமக்கு சொல்லப்பட்டுள்ளது.
இருப்பினும் தாவரங்கள் காயப்படும் போதும், வெட்டப்படும் போதும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாற்றிக்கொள்கின்றன என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூச்சிகளை உண்ணும் தாவரங்கள், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்கள் வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எதிர்வினைகளை உண்டாக்குகின்றன.
இவை மட்டுமல்லாது மற்றைய தாவரங்களும் தங்களுக்குள்ளே தகவல்களை பரிமாற்றிக் கொள்கின்றன. அராபிடோப்பிஸ் எனப்படும் ஒரு வகைத் தாவரமானது பூச்சிகள் மற்றும் புழுக்கள் தங்களது இலைகளை உண்ணும் போது மின்சமிக்கைகளை ஒரு இலையிலிருந்து மற்றொரு இலைக்கு அனுப்புகின்றன.
இந்த சமிக்கையானது ஒரு எச்சரிக்கையாக அனுப்பப்பட்ட ஒன்றே தவிர வலியினால் உண்டான சமிக்கை அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கதை இனி தான் ஆரம்பிக்கிறது..
ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் தக்காளி மற்றும் புகையிலை செடிகளை வைத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாமலும், அவற்றின் தண்டுகளை வெட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த செயல்களுக்குப்பிறகு அந்த செடிகளில் ஏற்படும் மாற்றத்தினை கண்காணித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் கிடைக்கப்பட்ட தரவுகளின் படி இவ்வாறு துன்புறுத்தப்பட்ட தாவரங்கள் 20 முதல் 100 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலான அல்ட்ராசோனிக் ஒலியினை வெளியிட்டுள்ளன. இந்த ஒலியானது அந்த தாவரங்களின் வலியினால் உண்டானது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், தக்காளிச்செடியின் தண்டினை வெட்டிய போது 25 விதமான அல்ட்ராசோனிக் ஒலியினை எழுப்பியது கண்டறியப்பட்டுள்ளது. புகையிலைச் செடியானது 15 விதமான அல்ட்ராசோனிக் ஒலியினை வெளியிட்டுள்ளது.
இரண்டு செடிகளை ஒப்பிடுகையில் தக்காளி செடியானது அதிக அளவு அல்ட்ராசோனிக் ஒலியினை வெளியிடுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் புகையிலைச் செடியானது அதிக அளவு சத்தமான ஒலியினை வெளியிடுவதாகவும், தாவரங்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஏற்ப ஒலியின் அளவினை மாற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு உட்படாத தாவரங்கள் குறைவான அளவு அல்ட்ராசோனிக் ஒலியினை வெளியிடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றொரு ஆய்வில் செடிகளின் இலைகளை பறித்த போது அந்த செடியானது வேதியல் திரவங்களை வெளியிட்டு தங்களது வலியினை வெளிப்படுத்தியுள்ளன. இந்த திரவங்கள் இலை உண்ணும் பூச்சிகளை தடுப்பதற்காக வெளியிடப்படுகிறது என்றும் கருதப்படுகிறது.
மனதினை திடப்படுத்திக் கொள்ளுங்கள்..
ஒரு புல்லினை நசுக்கும் போது வெளிவரும் ஒரு வகையான வாசனையானது அந்த புல்லானது ஆபத்தில் உள்ளது என்பதனை உணர்த்துவதற்காக வெளியிடப்படுகிறது.
இந்த வாசனையானது அந்த புல்லினை ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவி கேட்பதற்காக வெளியிடப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
தாவரங்கள் தங்களைத் தற்காத்து கொள்வதற்காக பல்வேறு வேதியியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்த நடவடிக்கைகள் தங்களது எதிரியினை எச்சரிக்கை செய்வதற்காவும், அருகில் உள்ள தாவரங்களுக்கு வரப்போகும் ஆபத்தினை தெரிவிப்பதற்காகவும் மற்றும் அவற்றிற்கு உதவி செய்யும் உயிரினங்களை அழைப்பதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்னொரு கருத்தும் நிலவுகிறது. தாவரங்கள் தங்கள் உண்ணப்படுவதை உணர்கின்றன என்பது தான் அது. கொலம்பிய பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பூச்சிகள் இலைகளை உண்ணும் போது உண்டாகும் சத்தத்தினை தாவரங்களினால் கேட்க முடியும்; இந்த சத்தத்தினை கேட்டவுடன் தாவரங்கள் எதிர்வினை செய்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றன என்ற விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
இவையெல்லாம் இதுவரை நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள். தாவரங்கள் உண்மையில் வெளிப்புறத்திலிருந்து வரும் ஆபத்துகளை உணரலாம், தங்களுக்கு ஏற்படும் தாக்குதலால் உண்டான வலியினை உணரவும் செய்யலாம். அல்லது ஒரு எளிமையான பிறப்பு-வழக்கை-இறப்பு என்ற விதத்திலும் அதன் வாழ்க்கை அமையலாம்.
எது எப்படி இருந்தாலும் உயிரினங்களால் தாவரங்களைக் காயப்படுத்தாமல் உயிர் வாழ முடியாது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. எனினும் தேவை இல்லாத காரணங்களுக்காக அவற்றினைத் துன்புறுத்துவதை தவிர்க்கலாம். இது தாவரங்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும்.
மற்ற உயிரினங்களுக்காக தங்களை அர்பணித்துக் கொண்டிருக்கும் தாவரங்களை அடுத்த முறை கடந்து செல்லும் போது அவற்றிற்கு நன்றி சொல்ல மறந்து விடாதீர்கள்.
ஜுராசிக் பார்க் திரைப்பட பாணியில் சரணாலயத்தின் புதிய முயற்சி! நிஜத்தில் சாத்தியமா?