ரோஜாக்களை வழங்குதல், காதலை வெளிப்படுத்துதல், இனிப்புகளை இணைகள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளுதல், டெடி போன்ற பொம்மைகளை பரிசளித்தல், இணைகள் தங்களுக்குள்ளான வாக்குறுதிகளை அளித்துக்கொள்ளுதல், அரவணைப்புகளை பிரத்யேகமாக நிகழ்த்தி கொள்ளுதல், முத்தங்களின் மூலம் காதலைப் பரிமாறிக்கொள்ளுதல் என காதலர் தினத்தை வரவேற்க கடந்த ஏழு நாட்களாக வண்ணமயமான நிகழ்வுகள் அரங்கேறின.
இப்படியான வண்ணமயமான நிகழ்வுகளின் உச்சமான காதலர் தினம் எனப்படும் வேலண்டைன்ஸ் டே இன்று. முதலில் வரலாற்றின்படி, வேலண்டைன்ஸ் தினம் ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் எண்ணம். திருமணம் செய்து கொள்ளவேண்டும் என துடித்த ஆண்களுக்கு உதவினார் வேலண்டைன். அரச கட்டளையை மீறி திருமணங்கள் நடத்தி வைத்தார். மன்னனுக்கு விஷயம் தெரிய வர வேலண்டைனைப் பிடித்து மரண தண்டனை விதித்தார். அவர் கொல்லப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14. இதுதான் பின்னாளில் வேலண்டைன்ஸ் டே என்று கொண்டாடப்படுவதாக கூறல்கள் உள்ளன. இதன் ஆதியாக பார்க்கப்படுவது காதலை ஊக்குவித்தல் என்பதுதான்.
உலகின் மிக உன்னதமானதாகவும் அதற்கு நேர் எதிராகவும் பார்க்கப்படும் உணர்வு காதல்! மனதிற்குள் மலர் மலருதல், வண்ணத்து பூச்சி விரிவடைதல், அருவிகள் கொட்டுதல் என காதல் நேரும்போது பலவை தோன்றுவதாக நாம் கூறுவோம். வெளியில் இருந்து பார்க்கும்போது பிதற்றலாய் தோன்றும் ஆனால் அது பிதற்றல் அல்ல! மனதிற்குள் எழும் புதிய உணர்வு, அதை விவரிக்கவே நம் முன் தோன்றும் விந்தைகளை நாம் நமக்குள் பொருத்தி பார்ப்போம்.
நம்மை நமது இறப்பில் இருந்து காப்பாற்ற எதுவும் இல்லாமல் போனாலும், நம்மை வாழ்வில் இருந்து காப்பாற்ற காதல் உதவும்!
– பாப்லோ நெருடா
பாப்லோ நெருடா என்ற கவிஞரின் வரிதான் மேல் கூறி இருப்பது. அவ்வரியின் ஆழம்தான் காதலுக்கு உண்டு! தினம் தினம் நாம் முன்னெடுக்கும் நிகழ்வுகளில் ஏற்படும் துன்பங்கள் கொஞ்சம் அல்ல. நபருக்கு நபர் துன்பத்தின் வீரியம் மாறிக்கொண்டே செல்லும். அந்த துனபத்தில் இருந்து நம்மை மீட்க, தேற்ற அங்கே காதல் தேவைப்படுகிறது.
அதற்காக காதல் என்பது தேவைக்கானது அல்ல. மேலே சொன்ன தேற்றல்கள், வாழ்வு நீதான் என்ற உணர்வுகள் பிரத்யேகமாக நமக்கு தோன்றும். அந்த பிரத்யேக நபரிடத்தில் இருந்து வரும் காதல் அல்லது நம்மிடம் இருந்து அந்த நபருக்கு செல்லும் காதல்தான் நம்மை வாழ்வில் இருந்து காப்பாற்ற உதவுவது! இதை எளிதாக கடத்த வேண்டும் என்றால் “ தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்” என்ற நடிகர் தனுஷ் எழுதிய பாடல் வரியை சொல்லலாம்!
சாதி மதம் எனும் வியாதியை போக்கிட சூத்திரம் சொல்லிடும் சாரம், காதல் எனும் உலக மறை!
-கமல்ஹாசன்
காதலில் நேரும் சமத்துவம் போல் வேறு எந்த உணர்விலும் உறவிலும் சமத்துவம் தோன்றுவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மையாய் திகழ்கிறது. காதலின் தனித்துவங்களில் மிக முக்கியமானவையாக இவை பார்க்கப்படுகிறது. மனதின் புரிதலின் அடிப்படையில் நிகழும் காதலுக்கு தனிப்பட்ட சுவாசமும் உணர்வும் உண்டு! அப்படியான வாழ்வியலில் பூக்கள் குலுங்கும். துயரங்கள் துரத்தினாலும் தண்டவாளங்களின் நடுவில் பூத்த பூவை போல அவை வெளிவந்து இயல்பாய் புன்னகைக்கும்!
உலக செழித்தலுக்கு காதலும் அவசியம், பொதுமறையை சாத்தியமாக்குவதற்கும் காதல் அவசியம், அனைத்தையும் போலவே காதலிலும் இன்ப துன்பங்கள், நன்மை தீமைகள் இருக்கின்றன. காதலை பெரியதாய் உன்னதப்படுத்தி உச்சத்தில் வைக்கவும், தீட்டாய் நினைத்து தள்ளி வைக்கவும் வேண்டாம்! நிகழும் காதல்கள் அனைத்தும் இயல்பாய் அழகியலாய் நிகழட்டும்!
யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்,
பூச்செண்டாய் பூமி திண்டாடும்!
– தாமரை
இப்படியான திண்டாடலை உலகிற்கு வழங்கும் காதலுக்கும், காதலர்களுக்கும், அனைத்து சக மனிதங்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!