அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, உலக மக்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. தொற்று வேகமாய் பரவல், ஊரடங்கு அமல், உயிரிழப்புகள் என கொரோனா சார்ந்த அனைத்தும் மக்களை வாட்டி வதைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இதனால், உலக நாடுகள் தங்களது பொருளாதரங்களை இழந்தன.
இழந்த பொருளாதரத்தை மீட்டெடுக்கும் நிலையில் பல உலக நாடுகளும் தீவிரமாக இறங்கி வருகின்றனர். ஆனால், பொருளாதரத்தை மீண்டும் பாதிக்கும் வகையில் உக்ரைன் மீதான ரஷியா தொடுத்துள்ள போர் இருந்து வருகிறது. 8 மாதங்களாக போர் நீடித்துவரும் நிலையில், கச்சா எண்ணெய், உணவு தானியங்களில் விலை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்த
பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. மேலும், முதலீடுகளை பல நாடுகளும் டாலருக்கு மாற்றி வருவதால் டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளை பொறுத்தவரை, அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வருவதால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.02 என்ற அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றைய பங்குச்சந்தை நேர முடிவில் ரூபாயின் மதிப்பு மேலும் 66 காசுகள் சரிந்து ரூ.83.02 என்ற நிலையை எட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஆறுமுகசாமி அறிக்கையில் நுட்பமான பல தகவல்கள் சொல்லப்படவில்லை-பாமக தலைவர் கருத்து