மு.க.ஸ்டாலினுடன் சந்தித்து பேசினேனா? நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று (அக்டோபர் 19) வள்ளுவர் கோட்டத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வரின் ஆணைக்கிணங்க ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-யை ‘பி’ டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த மு.க.ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர்” என்று ஓ.பன்னீர்செல்வம் மீது குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 20) ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை.
நானும் முதல்வரும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார். நான் முதல்வருடன் சந்தித்ததாக கூறுவதை நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகுவாரா?” என எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடும் வகையில் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலையில் பல கோடி முறைகேடு.. தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்