சீன விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டமான விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
விண்வெளிக்கு ஆராய்ச்சிக்காக சுற்றுலா சென்று வர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றன.
விண்வெளிக்கு சுற்றுலா செல்வது ஒன்றும் புதிதல்ல. பிரபல தொழிலதிபர்களான அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெஸாஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் தங்களின் சொந்த விண்கலங்களைப் பயன்படுத்தி விண்வெளிக்கு சுற்றுலா சென்று வந்துள்ளனர்.
இவர்களைப் போலவே, பல உலக பணக்காரர்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் இதற்கென தனி நிறுவனங்களை நிறுவி, விண்வெளிக்கு செல்ல விருப்பமுள்ளவர்களை அழைத்து செல்ல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காணத்தவறாதீர்கள்.. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!
இந்நிலையில், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) இன்னும் மூன்று ஆண்டுக்குள்ளேயே , அதாவது 2025 ஆம் ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா செல்வதற்கான பயணத்தைத் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சுற்றுலாப் பயணத்திற்கு டிக்கெட் விலையாக ஒரு நபருக்கு $287,200 முதல் $430,800 வரை வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2 கோடியே 32 லட்சத்து 68 ஆயிரம் முதல் 3 கோடியே 49 லட்சத்து 3 ஆயிரம் வரை இருக்கக்கூடும்.
இந்த விண்வெளி சுற்றுலாப் பயணத் திட்டம் வணிக ரீதியாக பெரும் லாபத்தை பெற்றுத் தரும் என்பதால், உலகப் பணக்காரர்கள் பலரும் இதில் போட்டிப் போட்டுக்கொண்டு முதலீடு செய்து வருகின்றனர்.