கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி, அமேசான் மழைக்காடுகளில் மரங்களை வெட்டுவதில் பிரேசில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெட்டப்பட்ட மரங்களை விட, சென்ற மாதம் இருமடங்கு அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரேசில் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ஜைர் பால்சோனரோ பதவியேற்றதிலிருந்து பிரேசில் நாட்டில் காடழிப்பானது 75 சதவீதம் அதிகப்படுத்தப் பட்டுள்ளது. நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லவே இந்த நடவடிக்கை என்று பால்சோனரோ கூறி வருகிறார்.
அமேசான் காடுகளைப் பொறுத்த மட்டில் ஏப்ரல் மாதமானது மழை பெய்யும் காலம். ஆதலால் மரங்கள் வெட்டப்படுவது குறைவாய் இருக்கும் என்றெண்ணிய நிலையில், ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காடுகள் வெட்டப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாய் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. வெட்டப்பட்ட காடுகளின் பரப்பானது 1,40,000 கால்பந்து மைதானங்களுடன் ஒப்பிடும் அளவிற்குப் பெரியதாய் உள்ளது.
உலக வனவிலங்கு நிதியத்தில் பணிபுரியும் மரியானா நபோலிடானோ ‘ இந்த குறுகிய கால அளவில் வெட்டப்பட்ட காடுகளின் பரப்பானது மிகவும் அதிகமானது; அமேசான் காடுகள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளன என்பதற்கான அறிகுறி இது’ என்று கூறியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக அளவிற்கு மரங்கள் அமேசான் காடுகளில் வெட்டப்பட்டிருந்த நிலையில் அதை விட அதிக அளவிற்கு மரங்கள் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வெட்டப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கும் விடயமாக உள்ளது.
New data shows the highest rate of Brazil's Amazon deforestation for the month of April. In April alone, at least 1,013 km² of rainforest was cleared, larger than the size of the city of Berlin, a 74.6% increase over the record set last year for April.https://t.co/FIxbG4E2vX pic.twitter.com/dgH7oSMX8s
— Greenpeace (@Greenpeace) May 6, 2022
அமேசான் காடுகளில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், உயிரினங்களும், விலங்குகளும் உள்ளன. பல லட்சத்திற்கும் அதிகமான பழங்குடி மக்கள் இந்த காட்டினை நம்பி வாழ்கின்றனர். கிட்டத்தட்ட ஒன்பது நாடுகளில் பரவிக்கிடக்கும் அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் (60 சதவீதம்) பிரேசில் நாட்டில் உள்ளன. உலக வெப்பமயமாதலை தடுப்பதில் முக்கியக் காரணியாக விளங்கும் அமேசான் காடுகள் ஒரு நிமிடத்தில் ஒரு கால்பந்து மைதானம் அளவிற்கு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று பிரேசில் நாட்டின் வான் ஆராய்ச்சி மையத்தின் செயற்கைகோள் தரவுகள் காட்டுகின்றன.
பால்சோனரோ ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட பொழுது தற்போதுள்ள சூழ்நிலைக் கொள்ளகைகளை மாற்றுவதாகக் கூறி இருந்தார். இவருடைய கருத்துக்கு விவசாயம் தொடர்பான வணிகம் செய்வோரும், சிறு விவசாயிகளும், அமேசான் காடுகள் தேவைக்கும் அதிகமான அளவிற்குப் பாதுகாக்கப்படுகிறது என்ற கருத்துகளைக் கொண்டோரும் ஆதரவு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாரா ராஜபக்சே? – இந்திய தூதரகம் அளித்த பதில்!