ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகள் நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது .
துர்கா தேவி 8 நாட்கள் கடுமையாக போராடி மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வையே நவராத்திரியாக மக்கள் கொண்டாடி வருகின்றனர் .ஆயுத பூஜை இந்த நவராத்திரி பணிடிக்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது . அசுர அரக்கனை கொன்ற பிறகு, துர்கா தேவியின் ஆயுதங்கள் பூஜைக்காக வைக்கப்பட்டனவாம் .அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் தான்,ஆயுத பூஜை அன்று மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் கருவிகளை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர். இதைத்தான் தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல இடங்களிலும் சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடி வருகின்றனர் .
நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்கள், தீமையை அழிக்கும் சக்தி வடிவமான துர்கா தேவியையும் ,அடுத்த மூன்று நாட்கள்,செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியையும் ,இறுதி மூன்று நாட்கள், அறிவின் வடிவமான சரஸ்வதி தேவியையும் மக்கள் பக்தியுடன் வழிபடுவது வழக்கம். “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதற்கேற்ப தொழிலுக்கு ஆதாரமாக விளங்குகின்ற தொழிற்கருவிகளையும், இயந்திரங்களையும், பொருட்களையும், வாகனங்களையும் தூய்மைப்படுத்தி சந்தனம், குங்குமமிட்டு அவற்றை இறை பொருளாகக் கருதி வழிபடும் நல்ல நாளே ஆயுத பூஜை திருநாளாகும்.
இதையும் படிங்க:தன் ஆய்வுப்பணியை அமைதியாக முடித்துக்கொண்ட மங்கள்யான் விண்கலம்!
அதேபோல் பத்தாவது நாளான விஜயதசமி அன்று ,தொடங்கிடும் நற்காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில், மக்கள் அன்னை அம்பிகையை வணங்கி கல்வி, கலை, தொழில் போன்றவற்றை தொடங்கி வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். அன்னை மகா சக்தியின் அருளால் மக்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெற்று, எல்லா நலங்களையும், வளங்களையும் பெற்று, பகையின்றி ஒற்றுமையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட வேண்டுவதே இதன் சிறப்பாகும் .
மேலும் விஜயதசமி நாளில் படிப்பைத் தொடங்கினால் குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள் என்பது எல்லோரது நம்பிக்கை. இதனால் அன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோவில்களுக்கு அழைத்துச் சென்று தமிழின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை விரலைப் பிடித்து எழுதச் செய்து அகரம் பழக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று சேர்க்கும் நிகழ்வுகளும் அரங்கேறும்.
இந்த நாள்களில் அனைவரும் ஒன்றாய் இணைந்து சரஸ்வதி தேவி அருளை பெற்று அறியாமை என்ற இருளை நீக்கி , வாழ்வில் வளமையையும், மகிழ்ச்சியையும் பெற்றிடுவோம் .அனைவருக்கும் ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை ,விஜய தசமி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.