பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே அவரை சுட்டதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் நேற்று அந்நாட்டு அரசுக்கு எதிராக வஜிலாபாத் நகரில் நடைபெற்ற மிகப்பெரிய பேரணியில் தலைமை ஏற்று கலந்து கொண்டார்.
இந்தப் பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதனால், பலத்த காயமடைந்த இம்ரான் கான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இம்ரான் கானால் அடுத்த 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் இவரின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பல தரப்பு மக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், இம்ரான் கான் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் அதனால், ஆத்திரமடைந்து சுட்டதாகவும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையில் அதிரடி: லிட்டருக்கு 60-ஆக உயர்த்திய தமிழக அரசு..!