இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
2014 – ஆம் ஆண்டு வெளிவந்த காக்கா முட்டை திரைப்படம் பல வித மனங்களையும் முழுவதுமாக ஆட்கொண்ட ஒரு திரைப்படம் என்பதில் பலருக்கு மாற்று கருத்து இருக்காது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இத்திரைப்படத்தை தயாரித்தார்கள். இப்படத்திற்கு பிறகு காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் மீது சினிமா பிரியர்களுக்கு தனி மதிப்பும் கூடவே எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 2016-இல் வெளிவந்த திரைப்படம் தான் ஆண்டவன் கட்டளை! விஜய்சேதுபதி மற்றும் ரித்திகா சிங் நடித்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. விஜய்சேதுபதியின் பிடித்தமான திரைப்படங்களில் பலருக்கு ஆண்டவன் கட்டளை இருக்கும். அதே ஆண்டில் குற்றமே தண்டனை என்ற திரைப்படத்தையும் இயக்குநர் மணிகண்டன் தந்தார். அத்திரைபடமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது .
இதையும் படிங்க: ஓடிடி-க்கு வந்த பொன்னியின் செல்வன்… இனி எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்!
இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கடைசி விவசாயி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதியை தவிர்த்து பெரிய நடிகர்கள் எவரும் இத்திரைப்படத்தில் இல்லை. பெருவாரியான மக்களிடம் திரைப்படம் சென்று சேரவில்லை என்றாலும், சென்று சேர்ந்தவர்களிடத்தில் இத்திரைப்படம் உணர்வுப்பூர்வமாக மாறியது.
ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாது, திரையுலகினரிடத்திலிருந்து இயக்குநர் மணிகண்டனுக்கு பல்வேறு பாராட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தன. இதையடுத்து இவர் இயக்கத்தின் அடுத்து என்ன திரைப்படம் வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினர்.
இந்நிலையில், மணிகண்டனின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இன்னும் இரண்டு வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.