அலுவலகத்திற்கு மீண்டும் வரச்சொல்வதால் தங்கள் பணியிலிருந்து பலர் விலகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களுக்காக வீட்டில் இருந்தபடியே பணிபுரியும் அலுவலர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யுமாறு அழைத்துள்ளன.
வீட்டிலிருந்து வேலை செய்வதை ஒரு சாரார் ஆதரித்தாலும், மற்றொரு சாரார் எதிர்க்கவே செய்கின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்வது, நிறுவனத்தின் உற்பத்தியினைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் நேர விரயத்தினையும் அதிகப்படுத்துகிறது என்பதே அவர்களின் எதிர்ப்பிற்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில், நிறுவனத்திற்கு மீண்டும் வரச்சொன்னதால் தனது பதவியினைத் துறந்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தில் இயந்திர வழி கற்றல் பிரிவின் இயக்குநராகப் பணிபுரியும் இயன் குட்பெல்லோ.
இது பற்றி வேர்ஜ் நிறுவனத்தில் பணிபுரியும் ஜோ என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆப்பிள் நிறுவனத்தின் பணிக்குத் திரும்பும் கொள்கையின் காரணத்தினால் தான் இயன் தனது பணியினைத் துறந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Ian Goodfellow, Apple’s director of machine learning, is leaving the company due to its return to work policy. In a note to staff, he said “I believe strongly that more flexibility would have been the best policy for my team.” He was likely the company’s most cited ML expert.
— Zoë Schiffer (@ZoeSchiffer) May 7, 2022
மற்ற நிறுவனங்களைப் போல ஆப்பிள் நிறுவனமும் தனது பணியாளர்களை அலுவலத்திற்கு அழைத்துள்ளது. இதற்காக பணிக்குத் திரும்பும் கொள்கை ஒன்றினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இக்கொள்கையின்படி, ஏப்ரல் 11ம் தேதி முதல் வாரத்திற்கு ஒரு நாளும், மே 2 முதல் வாரத்திற்கு இரண்டு நாட்களும், மே 23 முதல் வாரத்திற்கு மூன்று நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று கூறியுள்ளது. இக்கொள்கை ஆப்பிளில் பணி புரியும் பல ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏப்ரல் 13 முதல் 19 வரை ஆப்பிள் நிறுவனத்தினரால் எடுக்கப்பட்ட சர்வேயில், 76 சதவீதத்தினர் பணிக்கு வரும் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 56 சதவீதத்தினர் தங்களது பணியினை துறக்கும் மன நிலையில் இருப்பதாகவும் கூறப் பட்டுள்ளது.
கூகுள் நிறுவனமும் தனது பணியாளர்களை பணிக்குத் திரும்பச் சொல்லியிருந்தாலும், வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு அனுமதியளித்துள்ளது. மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் பெற்றோர் நிறுவனமான மெட்டாவும் தங்களது பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: பிரதமரை கலாய்க்கும் விதமாக விமர்சிக்கும் காங்கிரஸ்!