தென்னாப்பிரிக்காவில் உள்ள குவானோபில் என்னும் நகரமானது கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் அவதியுற்று வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்கான தண்ணீரினை சேகரிக்க பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நகரின் பல பகுதிகளில் உள்ள தண்ணீர் குழாய்களில் தண்ணீர் வருவது நின்றுவிட்டதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தண்ணீர் வரும் குழாய்களை நோக்கி படையெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள குவானோபில் நகரின் தண்ணீர்த் தேவையினை அதனைச் சுற்றி இருந்த நான்கு அணைகள் பூர்த்தி செய்து கொண்டிருந்தன. ஆனால் பல மாதங்களாக சரியான அளவு மழை பெய்யாததால் அந்த அணைகள் வறண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்க நாடானது 2015ம் ஆண்டுகளில் இருந்து கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினைச் சந்தித்து வருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டினால் நாட்டின் பொருளாதாரமானது சரிந்துள்ளது. முக்கியமாக அந்த நாட்டின் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க அரசின் நிர்வாகக் குறைபாடும், மனிதர்களின் செயல்பாடுகளால் உலகளவில் மாறிவரும் பருவநிலை மாற்றமும் இந்த தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
அணையிலிருந்து தண்ணீரானது திறந்து விடப்பட்டாலும் அந்த தண்ணீர் முழுவதும் வீடுகளுக்கு செல்லாமல், பல இடங்களில் ஏற்பட்டுள்ள கசிவுகளால் வீணாகிறது.
வீடுகளில் வசிக்கும் மக்கள் தினமும் நீண்ட தூரம் சென்று தங்களுக்குத் தேவையான தண்ணீரினை சேகரித்து வருவதினை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.
‘இங்கு வசிக்காத மக்களுக்கு இந்த பகுதியில் சூரிய உதயமானது எப்படி இருக்கும் என்பது தெரியப்போவதில்லை. கண்விழித்தவுடன் உங்களது மனதில் முதலில் தோன்றுவது தண்ணீரைப்பற்றியதாகவே இருக்கும்.’ என்று குவானோபில் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.
தண்ணீரில்லாத தினம்..
கடந்த பத்து வருடங்களாக குவானோபில் பகுதியினைச் சுற்றியுள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் சராசரி அளவிற்கும் குறைவான அளவே மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளின் தண்ணீர்க் கொள்ளளவு 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தற்போது உள்ள தண்ணீரில் இரண்டு சதவீதம் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் காலங்களிலும் சரியான மழை பொழிவினை இந்த பகுதி பெறாவிடில், தண்ணீரில்லாத நாளினை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அப்பகுதியின் அரசாங்கமானது துரித நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. நீர்க்கசிவுப் பகுதிகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கும், நிலத்தடி நீரினைக் கண்டெடுக்க நகரின் சில பகுதிகளில் துளையிடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
தண்ணீரில்லாத பகுதிகள் உலகில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் எனப்படும் நகரம் தண்ணீரில்லாத பகுதியாக மாறியது. தற்போது குவானோபில் நகரமும் தண்ணீரில்லாத பகுதியாக மாறிக்கொண்டிருக்கிறது.
துப்பாக்கி வகை நாயினம் இதுதானாம்; காக்கர் ஸ்பானியல் ஸ்பெஷல்!