மெட்டா நிறுவனம் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை வசப்படுதியதிலிருந்து தினம் ஒரு அதிர்ச்சிகரமான செயலை, தகவலை அறிவித்துக்கொண்டே இருக்கிறார். ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நடவடிக்கை பெரும் சர்ச்சையையும், ஆச்சரியத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரைத் தொடர்ந்து, தற்போது மெட்டா நிறுவனமும் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முகவலைதளம், வாட்சப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸ்க்கர் பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மெட்டாவின் வருவாய் எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைந்துள்ளதால், மெட்டாவின் பணியாளர்கள் எண்ணிக்கையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000- க்கும் மேற்பட்ட பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளேன். இந்த முடிவானது விசாவில் அமெரிக்கா வந்து பணியாற்றுவோருக்கு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். அந்தப் பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவ மெட்டாவில் சிறந்த குடியேற்ற நிபுணர்கள் உள்ளனர்.
மேலும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு 16 வாரங்கள் அடிப்படை ஊதியம் வழங்கப்படும். பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு 6 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு தொடரும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜி20 மாநாடு: புறக்கணிக்கும் ரஷிய அதிபர்