புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லக்ஷ்மிக்கு உயிரிழந்த இடத்தில் 1200 கிலோ கொண்ட நினைவு சிலை வைக்கப்பட்டு, சிலையின் மேல் புதுச்சேரியின் செல்ல மகள் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் யானை லக்ஷ்மி இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதனை அடுத்து மணக்குள விநாயகர் கோவிலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு சென்று அன்று மாலையில் கடலூர் சாலையில் உள்ள வனத்துறைக்கு அருகாமையில் ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஜே.வி.எஸ் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக மக்கள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் காமாட்சியம்மன் கோவில் வீதியில் லட்சுமி யானை உயிரிழந்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது யானை லஷ்மி உயிரிழந்த இந்த இடத்தில் நான்கு அடி பீடமும் இரண்டு அடி சாய்ந்த நிலையில் 1200 கிலோ எடை கொண்ட யானை உருவம் கற்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரதிஷ்டை செய்து புனித நீர் ஊற்றி தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் தரிசிக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது உயிரிழந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.
புகழ்வாய்ந்த கோவில் யானை லட்சுமிக்கு நினைவு மணிமண்டபம்! பணிகள் தீவிரம்