புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் ஸ்ரீ காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான யானை லட்சுமி நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்தது. இதனை அடுத்து யானை லட்சுமியின் உடலை பொதுமக்களின் அஞ்சலிக்காக மனக்குள விநாயகர் கோவில் வாயிலில் வைக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து யானைலட்சுமியை அடக்கம் செய்வதற்காக ஸ்ரீ காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்துக்கு சொந்தமான காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ஜே.வி.எஸ் நகரில் அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து யானை லட்சுமி உடல் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ள ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து இன்று காலை யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட பகுதியைச் சுற்றி உள்ள புதர்கள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஸ்ரீ காளத்தீசுவரர் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இங்கு புதுச்சேரி மாநிலம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து யானை லட்சுமியின் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருவதால் அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது மட்டுமல்லாமல் உயிரிழந்த யானை லட்சுமி நினைவாக அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.