நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடத்தப்படும் கலாசார திருவிழாக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. இப்படியான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை இயற்றினார் . அதன்படி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில், தற்போது பீட்டா, கூபா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென்றும், காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் காளைகள் உள்ளன என்றும் கூறி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது கடந்த 24-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதைக் கேட்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை 29-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்கள்.
இதைத்தொடர்ந்து, 29-ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி மனு மீதான விசாரனை நடைபெறும் என்று தெரிவித்தனர். அதன்படி, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு இந்த மனுக்கள் மீதான விசாரணையை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணையின் போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்தும், எப்படியெல்லாம் நடைபெறுகிறது என்றும் கேள்வி எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு, தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இவற்றுள் முக்கியமாக பார்க்கப்படுவது, “ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் 15 மீட்டர் தூரம் மட்டுமே ஓட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. காளைகள் எப்படி 15 மீட்டர் தூரம் மட்டும் ஓட முடியும்? வீரர்கள் அனைவரும் காளையை தொட அனுமதி உள்ளதா? ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற 15 சதுர மீட்டர் இடம் போதுமானதா? காளைகள் வெளியேற ஒதுக்கப்பட்ட 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன? 90 சதுட மீட்டர் குறுகிய இடத்தில் காளைகளை ஓட விடாமல் வீரர்கள் தடுக்கிறார்களா? காளைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடம், சென்று சேருடமிடம் தவிர ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா?” போன்ற கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, இக்கேள்விளுக்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதிலளித்தார். அவர் கூறியதாவது;
ஜல்லிக்கட்டு போட்டியின்போது தகுதியுடைய ஒரு வீரர் மட்டுமே ஒரு நேரத்தில் காளையை தொட முடியும். இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டியின் பங்கேற்கும் வீரர்கள் அவரவரின் இடங்களில் தான் நிற்க வேண்டும் என்றும் காளைகள் வெளியேறும் பாதையை அடைக்க அனுமதி இல்லை. மேலும், தேவைப்பட்டால் நீதிபதிகளின் கேள்விகள் தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். தமிழக அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பதிலுரையின்போது குறுக்கிட்ட நீதிபதி ரிஷிகேஷ் ராய், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு இந்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளை அழைக்க மாட்டீர்களா? என்று கேட்டார்.
‘நீதிபதிகளை அழைப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி’ என்று நீதிபதியின் கேள்விக்கு வழக்கறிஞர் பதிலளித்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும் போது மேகதாது அணைக்கு கர்நாடக அரசு அனுமதி கோருவதா? மருத்துவர் ராமதாஸ்