மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல், எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக இன்று காலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக ஆளுநரை சந்தித்து, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடர்பாக பேசினார். இதையடுத்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து இருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த திறனற்ற திமுக அரசின் சட்டத்துறை அமைச்சரான திரு ரகுபதி அவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
அரசாணை பிறப்பிக்காமல் அவசர சட்டம் இயற்றி, என்ன பயன் என்று தமிழக பாஜக முன் வைத்த கேள்வியை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்.
தங்கள் திறனற்ற தன்மையை மறைக்க பொய்களைப் பரப்பி மாண்புமிகு தமிழக ஆளுநரின் மேல் பழியை போட்டுக் கொண்டிருந்த திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.
ஆளும் திமுக அரசின் திறனின்மை மற்றும் மெத்தன போக்கினால் அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் எட்டு உயிர்கள் பலியானதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி – அமைச்சர் ரகுபதி