உலகின் பணக்காரப் பட்டியலில் முதன்மையாக இருக்கும் எலான் மஸ்க் பூமியின் மூலைமுடுக்கெல்லாம் இணைய இணைப்பு சென்று சேர வேண்டும் என்கிற நோக்கில் அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயற்கைகோள்களை தொடர்ந்து விண்ணில் ஏவி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி அன்றும் 49 செயற்கைகோள்கள் ஏவப்பட்ட நிலையில் 40 செயற்கை கோள்கள் சூரியப் புயலால் பாதிக்கப்பட்டு தீக்கு இறையாகியதை கண்டு உலகமே அதிர்ச்சிக்குள்ளாகியது.
சூரியப்புயல் என்பது சூரியனிலிருந்து திடீரென அதிக ஆற்றலில் வெளிப்படும் சூரியக்காற்று தான்.விண்வெளியில் நிலைநிறுத்தப்படும் செயற்கை கோள்களை இது கடுமையாக தாக்குகிறது. பூமியிலும் கம்பியில்லா தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும் ரேடியோ அலைகளை பாதிக்கும். இதனால் தகவல் தொடர்புகளும் முடங்கும். மின்சார இணைப்புகளையும் இது பாதிக்கும் என்பதால் உலகமே இருளில் மூழ்கும் ஆபத்தும் உண்டு என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
முதன்முதலாக 1859-ல் முதல் சூரியப்புயல் தாக்குதல் பதிவு நடைபெற்றது. அப்போது டெலிகிராப் நெட்ஒர்க் பாதிக்கப்பட்டதோடு, அங்கங்கே மின்சார அதிர்வுகள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்பொழுது பணப்பரிமாற்றம் முதல் உணவிற்கான நெல் கொள்முதல்வரை அனைத்துமே இணையத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இப்படி உலகமே இணையத்தை நம்பி செயற்படும் நிலையில் ஒரு மணி நேர இணைய துண்டிப்பு ஏற்பட்டாலே இணையத்தை நம்பியுள்ள உலகப் பொருளாதாரம் பெரியளவில் முடங்கப்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு மனிதர்கள் திண்டாடி போவார்கள்.
இதுபோன்ற சூரியப் புயல் தகவல் தொடர்பு பரிமாற்றத்தை கடுமையாக பாதிக்கக்கூடும். சூரியப்புயல் உருவாகினால் உலகமே இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்று உலக விஞ்ஞானிகள் கலக்கம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற சூரியப்புயல் இனி அடிக்கடி நிகழும் என கொல்கத்தாவில் உள்ள (INDIAN INSTITUTE OF SCIENCE EDUCATION AND RESEARCH ) இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சூரியனை கூர்ந்து கவனிப்பதற்காகவே ஆதித்யா L-1 (ADITYA L – 1) என்ற விண்கலத்தை உருவாக்கி வருகிறது. மேலும் இந்த சூரியப்புயலானது 11 வருடங்களுக்கு ஒரு முறை பூமியை தாக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.