சென்ற வாரம் அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. ஐம்பது ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு உரிமை சட்டம் நீக்கப்பட்டதினை அடுத்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.
15 வாரத்துக்கு பிந்தைய கருவைக் கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் உத்தரவிட்டது. இந்த உத்தரவினை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி தீர்ப்பளித்தது. கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை அடுத்து அமெரிக்காவில் உள்ள 50 மாகாணத்தில் 25க்கும் மேற்பட்ட மாகாணங்களில் கருக்கலைப்புக்கு எதிரான தீவிரமான தடை சட்டங்கள் அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல இடங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை கடுமையாக எதிர்த்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இது சம்பந்தமாக கொள்கை ரீதியிலான மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது சமூகத்தை சீர்குலைப்பதாக குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், ‘நாம் நினைத்ததை விட உலக நாடுகளுக்கு தலைமை வகிக்கும் விதத்தில் அமெரிக்கா முன்னேறி வருகிறது. தற்போது உச்சநீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பானது பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது மட்டுமல்லாமல் ஒருவரது தனியுரிமைக்கும் சவாலாகவே மாறியுள்ளது.’ என்று கூறினார்.
‘உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையினால் அமெரிக்க மக்கள் எந்த அளவுக்கு வெறுப்பாகியுள்ளனர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.’ என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், பிற மாகாணங்களுக்குச் சென்று கருக்கலைப்பு செய்துகொள்ளும் அமெரிக்க பெண்களை கைது செய்ய வாய்ப்பிருப்பதாக ஜோ பைடன் கணித்துள்ளார்.
மாநில கவர்னர்களுடன் கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசிய ஜோ பைடன், கருக்கலைப்புக்காக வேறு நாடுகளுக்குச் செல்லும் பெண்களைப் பாதுகாக்கவும், கருக்கலைப்பு தடை செய்யப்பட்ட மாநிலங்களில் உள்ள பெண்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.