காலையில் எழுந்தவுடன் சில நேரங்களில் நமது முகம் முழுவதும் வீங்கி இருக்கும். சிலருக்கு கண்கள் கீழும் மேலும் மட்டும் வீங்கியிருக்கும். இதற்கு என்ன காரணங்கள் இப்படி ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தூங்குவது மிக முக்கியம்:
குறைவான நேரம் தூங்குவது தான் இதற்கு முக்கிய காரணம். போதுமான தூக்கம் இல்லையென்றால், கண்களுக்கு கீழ் இருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைந்து, திரவத்தை வெளியிடலாம். இதனால் தான், கண்ணும் கண்ணை சுற்றியுள்ள பகுதிகளும் வீங்கி காணப்படும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்குவது தான் முறையான தூக்கம். இதை கடைப்பிடித்தால் முக வீக்கத்தை தவிர்க்க முடியும். மேலும், தூங்கும் போது தலையை உயர்த்தி வைத்தபடி தூங்குவது நல்லது.
பாதிப்பை ஏற்படுத்தும் சோடியம்:
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் சோடியம் அதிகமாக இருந்தால் முக மற்றும் கண்களில் வீக்கங்கள் காணப்படும். ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராம் சோடியத்தை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வது இந்த பிரச்னைக்கு மற்றொரு தீர்வாகும்.
ஒவ்வாமை:
சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடிய வகையில் கண்கள் மற்றும் முகத்தில் வீக்கம் காணப்படும். அதுமட்டுமின்றி, கண்களும் சிவப்பாக மாறி விட வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள்களை உண்ணவோ பயன்படுத்தவோ கூடாது. காரணம் ஒவ்வாமை ஏற்பட்டால் உடலில் உள்ள ஹிஸ்டமைன் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும்.
உடலின் தண்ணீர் அளவு:
உடலின் தண்ணீர் அளவானது சமநிலையில் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உடம்பில் சோடியம் அதிகமாக ஆரம்பித்துவிடும். இப்படி நடப்பதால் தான் முகம் மற்றும் கண்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனை தடுக்க, நாம் தினந்தோறும் அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும். இது நமது உடலில் உள்ள வேதிப் பொருள்களை சமநிலையில் வைத்திருக்கவும் உதவும்.
கண்ணீர்:
நாம் அழும்போது கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான இரத்த ஓட்டம் இருக்கும். இந்த இரத்த ஓட்டமானது இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் மூலம் முகம் மற்றும் கண்களில் வீக்கங்கள் உண்டாகும். முகம் வீங்காமல் இருக்க அதிகம் அழுவதை தவிர்க்க வேண்டும்.
மதுவும் வயதும்…
சிலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பர். மேலும், இவர்களின் கண்களைப் பார்க்கும்போது வீங்கியே காணப்படும். இதற்கு காரணம் அதிக மதுவினை அருந்துவது தான். மதுவானது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து முகம் மற்றும் கண்களை வீங்க வைக்கிறது. இதனை தடுக்க மது அருந்த கூடாது. அப்படியே அருந்தினாலும் தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது.
அதிக வயதானவர்களுக்கு கண்கள் அதிகமாக வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலாஜின் எலாஸ்டின் போன்ற திரவங்கள் வயதானதும் குறைவாகவே சுரக்கும். இதனால் இரத்த தசைநார்கள் மெலிந்து கண் வீக்கத்தை ஏற்படுத்தும். வயதாகும் நிலையில் வருவதால் இதை யாரும் கண்டு கொள்வதில்லை. அழகாவே இருக்க வேண்டும் எனும் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை செய்து கொள்கின்றனர்.
மரபியல் தொடரும்..
மிக முக்கியமானது மரபியல் பிரச்சனை. மரபியல் வழியாக இந்த கண் மற்றும் முக வீக்கமானது ஏற்படுகிறது இருந்தாலும் இதனை தடுக்க ட்டர்மல் ஃபில்லர்ஸ் முறையும் பிளாஸ்டிக் சர்ஜரி முறையும் கையாளப்படுகிறது.
இப்போது தெரிந்து கொண்டீர்களா தூங்கி எழுந்ததும் முகம் மற்றும் கண்களில் வீக்கம் ஏற்படுபதற்கான காரணங்கள் என்னவென்று!
சீசன் வந்தாச்சு; வாங்க மாங்காய் சாதம் செய்து அசத்தலாம்!