உத்திரபிரதேச மாநிலத்தில் மாப்பிளை தலையில் விக் வைத்து வழுக்கையை மறைத்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் தயாராகி திருமணம் நடக்கவிருக்கும் இடத்துக்கு ஊர்வலமாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, கடும் வெயில் காரணமாக மாப்பிள்ளைக்கு லேசான தலைச்சுற்றல் வந்து மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் தலையிலிருந்த விக் கழன்று விழுந்துவிட்டது.
அதன் பிறகுதான் மாப்பிள்ளை தலை வழுக்கை என அனைவருக்கும் தெரியவந்தது. மாப்பிள்ளைக்குத் தலை வழுக்கை என்ற செய்தி மணப்பெண்ணுக்குச் சென்றது. அவர் இந்தத் திருமணத்தை உடனே நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். தன்னால் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கவே முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மணப்பெண் கேட்கவில்லை. இதையடுத்து பிரச்னை போலீஸ் நிலையம் சென்றது. போலீஸாரும் பேசிப்பார்த்தனர். அங்கேயும் தீர்வு காணப்படவில்லை.
இதையடுத்து ஊர் பஞ்சாயத்து கூடியது. மணமகன் தலை வழுக்கை என்பதை மறைத்து திருமணத்தை நடத்த முயன்றதாக மணப்பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்தத் திருமணத்துக்கு ரூ.5.66 லட்சம் செலவு செய்திருப்பதாக மணப்பெண்ணின் தந்தை தெரிவித்தார்.
அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுப்பதாக மாப்பிள்ளையின் தந்தை, பெண் வீட்டாரிடம் தெரிவித்தார். இதையடுத்து மணமகன் மணப்பெண் இல்லாமல் தனது சொந்த ஊரான கான்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
மணப்பெண்ணின் சித்தப்பா இது குறித்துக் கூறுகையில், “மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளையின் தலை வழுக்கை என்பதை மறைத்திருக்கக் கூடாது. உண்மையை முதலிலேயே சொல்லியிருந்தால் எங்களது மனநிலையை தயார்ப்படுத்திக்கொண்டிருப்போம்.” என்று கூறினார்.
தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் அப்டேட்…ஸ்டரஞ்சேர்ஸ் திங்ஸ் அப்டேட்…உங்களுக்காக இதோ!