தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருப்பது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 494 தனியார் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. தனியார் பல்கலைக்கழகங்கள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒவ்வொரு ஆண்டும் இணைப்பு அங்கீகாரம் பெற வேண்டும்.
அதுவும் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாகவே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அந்தவகையில் நடப்புக் கல்வியாண்டுக்கு பெரும்பாலான கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெற விண்ணப்பித்திருந்த நிலையில், 10 கல்லூரிகள் இதற்காக விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போதிய அளவு மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்த விரும்பவில்லை எனவும், ஆகையால் தாங்கள் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திக் கொள்கிறோம் என்று அந்தக் கல்லூரி நிர்வாகங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.
இதன் மூலம் 10 கல்லூரிகளில், இறுதியாண்டு படிப்பு முடியும் வரை இன்னும் 3 ஆண்டுகள் கல்லூரிகள் இயங்கும் என்றாலும், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டில் நடத்தப்படாது. ஆகையால், தற்போது படித்துவரும் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு, 10 கல்லூரிகளும் முழுமையாக மூடப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் அந்த 10 தனியார் பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுகின்றன. அந்த 10 பொறியியல் கல்லூரிகளின் பெயர்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்தியாவையே உலுக்கிய ‘விஸ்மயா’ வழக்கு; வெளிவந்த அதிரடி தீர்ப்பு!