குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து தமிழ்நாடு தேர்வாணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 21-ம் தேதி 5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடந்தது. அதேபோல, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
ஆனால், மாதக்கணக்கில் காலங்கள் சென்றும் தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், எப்போது முடிவுகள் வருமென்று பரீட்சை எழுதியவர்கள் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான விவகாத்துக்காக குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை உத்தரவு