சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அக்கூட்டத்தில் என்னென்ன விவாதிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தன்று நடைபெற இருக்கும் கிராம சபைக் கூட்டம் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
- 1998-ம் ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரத் தினத்தன்று, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
- இந்த கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும்.
- மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
- கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதிச் செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுதல் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும்.
- தனிநபர் சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை, எழில்மிகு கிராமம் பற்றிய விழிப்புணர்வு, கழிப்பறை பயன்பாடு, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், திடக்கழிவு-திரவக்கழிவு பற்றிய விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, மாற்றுப் பொருட்கள் பயன்பாடு ஆகியவற்றை பற்றி விவாதிக்க வேண்டும்.
- மழைநீர் சேகரிப்பு, நீர்வழிப்பாதை, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மறுகணக்கெடுப்பு, ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டும்
- சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, நிலமற்றவர்களுக்கு ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனை பட்டா வழங்குவது ஆகியன பற்றி கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டங்கள் சார்ந்த குறைபாடுகளை மக்கள் குறைதீர் மையத்தில் 8925422215 மற்றும் 8925422216 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற தகவலையும் மக்களிடம் கொண்டுப்போய்ச் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்திற்கான செலவு வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ரத்து