உலகில் உள்ள பல உயிர்களையும் எளிதில் உணர்ச்சி பூர்வமாக்க வேண்டுமாயின், அம்மாவை பற்றிய பேச்சுகள் போதுமானது. இதை நம் தமிழ் சினிமாவோடு ஒப்பிட்டால் பக்காவாக பொருந்திப்போகும். நம் தமிழ் திரைப்படங்களில் அம்மா சார்ந்த கதைகள் பலவற்றை பார்க்கலாம்; அம்மா சார்ந்த பாடல்கள் பலவற்றை கேட்கலாம். நிஜ உலகில் மட்டுமல்ல சினிமா உலகிலும் அம்மா கதாப்பாத்திரங்கள் நெருக்கமாக நம்மை அரவணைத்துக் கொள்ளும். ‘அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே’ என்ற பாடலாசிரியர் சிநேகனின் வரியை ஒப்புக்கொண்டு வழிமொழிபவர் இங்கு பலர்.
பல பாடல்கள் அம்மாவைக் கொண்டாடித் தீர்க்க, அப்போதும் அது போதவில்லை என்ற உண்ரவு தொடர்ந்து நீடிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரியில் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மதர் சாங்’ குறித்து காண்போம். இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். விக்னேஷ் சிவனின் வரிகளின் எளிமையில், யுவனின் மென்மையான இசையில், சித் ஸ்ரீராம் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒலிக்க…. மதர் சாங் மெலடியாக கேட்பவரை சென்று சேர்கிறது.
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
என்று ஆரம்பத்திலேயே எளிமையை தூக்கி பிடித்து, அதனூடே நயமாக தன் வரிகளை செலுத்தி, நான் கெட்டிக்காரன் என நிருபித்திருக்கிறார் விக்னேஷ் சிவன் அவர்கள்.
சினுங்கிய போது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லி கொடுத்தாய் – ஆவலோடுதான்
வளரந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடை காத்தாய் – ஆசையோடுதான்
அம்மா என் முகவரி நீ
அம்மா என் முதல்வரி நீ
என் உயிரென்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகமே என் தாயே
அம்மாவின் அருகில் இருப்பவரை கொஞ்சம் தள்ளிவைத்து, அம்மாவை விட்டு தொலை தூரத்தில் இருக்கும் நபர்களுக்கு இந்த வரிகள் தரும் தாக்கத்தை எண்ணிப் பாருங்கள். அம்மாவை பிரியா வரம்தா என்று அவர்களின் மனதுக்குள் குரல் கேட்டுக்கொண்டிருந்தாலும் கேட்கும்.
உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்க்கையின் மேல்
என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே
ஒட்டு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துலங்கிடுமே
எல்லாம் மாறுமே
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்
இதற்கென காணிக்கையாய்
நான் என்னதான் தருவதோ
‘நம்பிக்கை அதானே எல்லாம்’ என்று சொல்லுவது எப்படி உகந்ததோ, அதேபோலதான் ‘அம்மா அவுங்கதானே எல்லாம்’ என தன் அம்மாவின் மீதான பாசத்தையும் சேர்த்து வரியில் பொழிய செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
‘உன் வாழ்க்கையின் மேல், என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே’ மற்ற வரிகள் எல்லாம் சிறப்பாய் பூத்தாலும், இந்த வரி தரும் வாசனை வேறு. அம்மாக்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வை புதைத்து மறைத்து, தன் பிள்ளைகளின் நலனை உறுதிசெய்ய, பிள்ளைகளின் வாழ்வை சிறப்பிக்க அனைத்தையும் செய்கிறார்கள். பிள்ளைகளின் வாழ்வுதான் தங்களின் வாழ்வும் என்று அம்மாக்கள் வாழத் தொடங்குகிறார்கள். அந்த வாழ்வுக்கு ‘இதற்கென காணிக்கையாய் நான் என்னதான் தருவதோ’ என்ற வரியை பதிலாய் அன்போடு பல பிள்ளைகள் தருவார்கள்.
பாடலைக் காண ;https://www.youtube.com/watch?v=auBq_Z6zWSE