சீனாவில் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் அதிக வெப்பநிலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உச்சபட்ச வெப்பநிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ‘ தற்போது அதிக வெப்பநிலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
சிச்சுவான், சோங்கிங், குய்சோவ், ஹூபே, ஹுனான், ஜியாங்கி, ஜெஜியாங், புஜியான் மற்றும் குவாங்டாங் ஆகிய பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை இருக்கும்.
பகல் நேரத்தில், சிச்சுவான், சோங்கிங், ஹுனான், ஜியாங்சி மற்றும் புஜியன் ஆகிய இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.
பகல் வேளையில் தொழிலாளர்களும் ஊழியர்களும் வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறும், வெளிப்புறங்களில் நடக்கும் பணிகளைத் தள்ளிவைக்குமாறு உள்ளூர் நிர்வாகங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு மற்றும் தன்னார்வ மீட்புப் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனத்தில் நான்கு நிறங்களில் எச்சரிக்கை செய்தி விடுக்கப்படுவது வழக்கம். ஆரஞ்சு, மஞ்சள், நீலம் மற்றும் சிவப்பு. இதில் உச்சபட்ச எச்சரிக்கையாக சிவப்பு எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோடையில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் நீர் நிலைகள் வறண்டுள்ளது. ஜியாங்சு, அன்ஹுய், ஹூபே, ஜெஜியாங், ஜியாங்சி, ஹுனான், குய்சோவ், சோங்கிங், சிச்சுவான் மற்றும் திபெத்தின் சில பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகின்றது.
சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் வெப்பநிலை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குப் பிறகு வெப்பநிலையின் தீவிரம் குறையும் என்று தேசிய கண்காணிப்பு மையம் கணித்துள்ளது.
சென்னையில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல்.. பரபரப்பில் பயணிகள்!