துள்ளவதோ இளமையில் ஆரம்பித்து இறுதியாக வெளிவந்த நானே வருவேன் வரை செல்வராகவன் இயக்கிய திரைப்படங்கள் குறித்தும், அவரின் இயக்க பாணி குறித்தும், அவரின் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் வியந்தவை குறித்தும் பலமுறை பேசியாயிற்று. எவ்வளவு முறை பேசினாலும், மீண்டும் ஒரு முறை புதியதாய் அவரின் இயக்கத்தை குறித்துப்பேசும் அளவிற்கு செல்வராகவனின் இயக்கம் இருப்பதுதான் அவரின் தனிச்சிறப்பு! இப்படியான தனிச்சிறப்பை உடைய இயக்குநர் செல்வராகவன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!
பிறந்தநாள் அன்று செல்வராகவனைப் பற்றி எழுதலாம் என்று எண்ணிய போது, அவரின் திரைப்படங்கள் பலவும் மனதுக்குள் ஓட ஆரம்பித்தன. சில காட்சிகளுக்கு பின்னிருக்கும் உவமை தெளிவாய் தற்போது புரியத்தொடங்கியது. அப்படியாக மயக்கம் என்ன திரைப்படத்தின் சில காட்சிகளை பார்த்த போது, திடீரென அப்படத்திற்கு தொடர்புடைய, படத்தில் இல்லாத பாடல் ஒன்று நியாபகம் வர..பாடலை ஒலிபரப்ப விட்டேன்!
அவ்வளவுதான், இயக்குநர் செல்வராகவனை பற்றியல்லாமல் பாடலாசிரியர் செல்வராகவனை பற்றி எழுதலாம் என முடிவெடுத்தப்பின் அமைந்ததே, இக்கட்டுரை.
கண் முன்னே எத்தனை நிலவு
தான் இயக்கிய துள்ளுவதே இளமை திரைப்படத்தில் தன் முதல் பாடலை எழுதியிருக்கிறார், செல்வவராகவன். பலருக்கும் அறிந்த பாடலாக கண் முன்னே எத்தனை நிலவு பாடல் இருந்தாலும் இது செல்வராகவன் எழுதிய பாடல் என்று பலருக்கு தெரியாது.
ஏன் உடம்பிலும் உடம்பிலும் மாற்றம்
என் தலை முதல் கால் வரை ஏக்கம்
பருவம் என்றால் எரிய வேண்டும் காதலிலே
என பதின் பருவத்தின் பின் பாதியில் தோன்றும் உணர்வுகளை இப்பாடலில் செல்வராகவன் பதிந்திருப்பார். அதே சமயம்,
அட ஒரு பெண் காதல்
பழ பழசு
இங்கு பல பெண் காதல்
புது புதுசு
தங்கம் கொஞ்சம் வேண்டாம்
எனக்கு தங்க புதையல் வேண்டும்
என்று மனதின் அல்லது ஹார்மோனின் தாவுதலை கூறி இருப்பார், செல்வராகவன்.
ஆயிரத்தில் ஒருவன்
இதன் பின்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் செல்வராகவன் எழுதிய பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் நாம் விரும்பிக்கேட்கும் பாடல் செல்வராகவன் எழுதியது எனபதைத்தான் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஓ ஈசா என் ஈசா, மாலை நேரம், இந்த பாதை போன்ற பாடல்களை எழுதியவர் செல்வராகவன்தான்.
கதையின் சூழல் ‘ஓ ஈசா என் ஈசா’ பாடலில் பறந்து விரிந்திருப்பதை நம்மால் பாடலை கேட்டால் அறிய முடியும்!
நான் போடும் வேஷம்
பார்த்து சிரிக்காதே
என் உள்ளே விஷம்
தோண்டி குடிக்காதே..
ஒரு நாளில் என்னுள்
அடங்கும் தூசி
நீ உன்னை கொன்று
என்னை யாசி..
மேல் சொன்ன இவ்வரிகளை உற்று நோக்கினால் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் காட்சிகள் நினைவுக்கு வரும். இந்த பாதை பாடலில் வாழ்வின் தத்துவமாய் சிலவற்றை செல்வராகவன் விதைத்திருப்பார். உதாரணமாக,
ஓடம் நதியில் போகும்
நதியும் ஓடம் மேல் போகும்
அழுவதும் சிரிப்பதும்
உன் வேலை
நடப்பவை நடக்கட்டும்
அவன் லீலை
மரங்கள் இங்கு பேசும்
பனித்துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்
போன்ற வரிகளை கூறலாம். இதைத்தாண்டியும் பல வரிகள் இப்பாடலில் உள்ளன. ‘நான் இங்கு கலந்தேன் ஒருப்புயலில்‘ என கூறிய பாடலாசிரியர் இயக்குனர் நடிகர் செல்வராகவனுக்கு தினவாசல் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
இயக்குனர் செல்வராகவன் எழுதிய பாடலா இது? இப்படி அசத்தியிருக்கிறாரே…