இலங்கை கலவரத்துக்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இச்சூழலில், இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவ ஜெட் விமானத்தில் மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இதன்பின்னர், மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், மாலத்தீவில் அவருக்கு அடைக்கலம் தரக்கூடாது என்றும் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு மாலத்தீவில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வந்துள்ளது.
இலங்கையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறவே இலங்கை அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. இருப்பினும், இலங்கையில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது ட்விட்டர் பதிவில் இலங்கை போராட்டம் சார்ந்து பதிவிட்டுள்ளார்.
I continue to follow the situation in Sri Lanka very closely. It is important that the root causes of the conflict and protestors’ grievances are addressed. I urge all party leaders to embrace the spirit of compromise for a peaceful and democratic transition.
— António Guterres (@antonioguterres) July 14, 2022
அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :
இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்துக்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்துக்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டு கொள்கிறேன்.
மேற்கூறியவாறு, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
ஆக்ரோஷத்துடன் காணப்படும் இந்திய தேசிய சின்னம்: எதிர்க்கட்சிகள் விமர்சனம்