பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் காரில் செல்லும்போது ‘சீட்-பெல்ட்’ அணியாததால் அபராதம் செலுத்தியுள்ளார்.
‘சட்டம் என்பது ஒருநாட்டின் பிரஜை ஆனாலும் சரி குடியரசுத் தலைவர் ஆனாலும் சரி அது ஒன்றுதான்’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப ஒரு நிகழ்வு பிரிட்டனில் அரங்கேறியுள்ளது.
பிரிட்டனின் பிரதமர் ரிஷி சுனக். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் கார் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, காருக்குள் இருந்தபடியே வீடியோ ஒன்றுக்காக பேசினார்.
இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கார் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சீட்-பெல்ட்டை அணியாமல் உள்ளார். வைரலான வீடியோவால் காரில் ‘சீட் பெல்ட்’ அணியாமல் பிரதமர் இருந்தது குறித்து பலவித சர்ச்சைகள் உருவாகின.
இந்த சர்ச்சை பெரும் பேசுபொருளாக மாறிய நிலையில், பிரதமர் அலுவலகம் இந்த சர்ச்சை குறித்து பதிலளித்துள்ளது. அதில், பிரதமர் ரிஷி சுனக் காரில் செல்லும்போது ‘சீட் பெல்ட்’ அணியாதது தவறான செயல் என்றும், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீட்-பெல்ட் அணியாததற்காக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 500 பவுண்ட் (இந்திய மதிப்பில் 50,000 ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதும், அதை அவர் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ்க்கு ஆதரவாக யாருமே இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்