தூத்துக்குடி உப்பாற்று ஓடை முழுவதும் ரசாயனக் கழிவுகளால் செந்நிறமாக மாறியுள்ளதால், அருகில் உள்ள உப்பளங்கள் விஷமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்கும் தொழில் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கென 10-க்கும் மேற்பட்ட மீன் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி-மதுரை சாலையில் கோமஸ்புரம், புதூர் பாண்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மீன் பதப்படுத்தப்படும் ஆலைகள் இயங்கி வருகின்றன. மீன் பதப்படுத்த இங்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு வெளியேறும் ரசாயனக் கழிவு நீர் சுத்திகரிப்பட்டு கோமஸ்புரம் உப்பாற்று ஓடை வழியே வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், தொழிற்சாலை கழிவுநீர் காரணமாக கடந்த சில நாட்களாக அந்த உப்பாற்று ஓடை செந்நிறமாக காட்சியளித்தது. இதனைக் கண்ட அவ்வூர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் செந்நிறமாக மாறிய உப்பாற்று ஓடையை பார்வையிட்டு விசாரணை நடத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதன்பிறகு ஆய்வு நடத்தப்பட்டதில், 3 மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் ரசாயனக் கழிவு நீரை சுத்திகரிக்காமல் அப்படியே உப்பாற்று ஓடையில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதனை அடுத்து, 3 ஆலைகளுக்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உப்பாற்று ஓடையில் ரசாயனக் கழிவுநீர் கலப்பதன் காரணமாக, நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அருகில் இருக்கும் சுமார் 200 ஏக்கர் உப்பளங்கள் முழுவதும் விஷமாக மாறும் அபாயம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜன்னல் ஓர இருக்கைக்கு முன்பதிவு செய்திருந்த விமான பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி